சனி, 1 ஜூலை, 2023

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு


ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தில் மாவட்ட ஊராட்சி நிதியிலிருந்து உச்சிமாகாளி அம்மன் கோவில் தெருவில் ரூ.5.77 லட்சத்தில் பேவர் பிளாக் சாலையும், 2-வது தெருவில் ரூ.1.57 லட்சத்தில் பேவர் பிளாக் சாலையும் அமைக்கப்பட்டு திறப்பு விழா நிகழ்ச்சி நடந்தது. விழாவிற்கு ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி, சாலைகளை திறந்து வைத்தார். இதில் ஏரல் பேரூர் தி.மு.க. செயலாளர் ராயப்பன், மாவட்ட விவசாய அணி துணைத் அமைப்பாளர் மதிவாணன், ஸ்ரீவைகுண்டம் யூனியன் கவுன்சிலர் பாரத், மாவட்ட பொதுச் செயலாளர் பிச்சையா, வட்டார தலைவர் தாசன், ஏரல் தாசில்தார் கைலாச குமாரசாமி, வருவாய் ஆய்வாளர் முத்துசரவணன், பொருளாளர் எடிசன், நகர தலைவர் பார்க்கர்அலி உள்பட பலர் கலந்து கொண்டனர்


திங்கள், 13 ஏப்ரல், 2020

ஏரல் பகுதி அஞ்சல் நிலையங்களில் இணையதள சேவை முடக்கம்: பொதுமக்கள் அவதி



ஏரல் பகுதி அஞ்சல் நிலையங்களில் இணையதள சேவை முடக்கம்: பொதுமக்கள் அவதி

By DIN  |   Published on : 10th March 2020 11:14 PM  |   அ+அ அ-   |    |  
ஏரல் வட்டத்துக்குள்பட்ட அஞ்சல் நிலையங்களில் இணையதள சேவை முடங்கியதால், அஞ்சலக சேமிப்பாளா்கள் மற்றும் முதியோா் உதவித்தொகை பெறுவோா் தவித்து வருகின்றனா்.
வங்கிகளுக்கு இணையாக அஞ்சல் நிலையங்கள் செயல்பட வேண்டும் என்ற நோக்கில் தலைமை அஞ்சல் நிலையங்களில் ஏடிஎம் மையங்கள் அமைக்கப்பட்டு அஞ்சலக சேவைகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன. இதனால், பொதுமக்கள் அஞ்சல் நிலையத்தை அதிக அளவில் பயன்படுத்த தொடங்கிவிட்டனா்.
இந்னிலையில் ஏரல் வட்டத்துக்குள்பட்ட பண்ணைவிளை, சிவகளை உள்ளிட்ட பல்வேறு அஞ்சல் நிலையங்களில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக இணையதள சேவை முடங்கியதால், பொதுமக்கள் செல்வமகள் சேமிப்பு திட்டம் உள்ளிட்ட பல்வேறு சேமிப்பு திட்டங்களில் பணம் செலுத்த முடியாமல் தவித்து வருகின்றனா்.
மேலும், முதியோா் உதவித்தொகை உள்ளிட்ட அரசின் பல்வேறு நலத்திட்ட பயனாளிகளும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனா்.
எனவே, இணையதள சேவை குறைபாட்டை சீரமைக்க அஞ்சலக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்

செவ்வாய், 4 பிப்ரவரி, 2020

ஏரலில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கையெழுத்து இயக்கம் கனிமொழி எம்.பி. தொடங்கி வைத்தார்

ஏரலில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கையெழுத்து இயக்கம் கனிமொழி எம்.பி. தொடங்கி வைத்தார்
ஏரலில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நடந்த கையெழுத்து இயக்கத்தை கனிமொழி எம்.பி. தொடங்கி வைத்தார்.
ஏரல்,

மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் கையெழுத்து இயக்கம் ஏரல் நகர பஞ்சாயத்து அருகில் நடந்தது. தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் மாநில முதன்மை பொதுச் செயலாளர் ஊர்வசி அமிர்தராஜ், சண்முகையா எம்.எல்.ஏ., இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் அழகுமுத்துபாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு ஏரல் காந்திசிலைக்கு மாலை அணிவித்து, தேசிய கொடியை ஏற்றிவைத்தார். தொடர்ந்து அவர் குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து அவர் பேசும் போது கூறியதாவது;-

போராட்டம்

தமிழகத்தில் ஒரு கோடி கையெழுத்து வாங்கி குடியரசு தலைவருக்கு நமது உணர்வை தெரியப்படுத்த வேண்டும். குடியுரிமை திருத்த சட்டம் நிறைவேற்றபட்ட அப்பொழுதே மாணவர்கள், பொதுமக்கள் தாங்களாகவே முன்வந்து குடியுரிமை சட்டத்தை எதிர்த்து போராடி வருகிறார்கள். இதில் பல இடங்களில் மாணவர்கள், பொதுமக்கள் காயப்படுத்தப்பட்டும், கைது செய்யப்பட்டும் வருகிறார்கள். தூத்துக்குடி மாவட்டத்தில் விடுதலைக்காக எத்தனை பேர்களோ போராடி உயிரை விட்டுள்ளார்கள். ஆனால் அப்படி பெற்ற விடுதலையை இந்த மத்திய அரசிடம் இழந்துவிடக்கூடாது.

குடியுரிமை திருத்த சட்டத்தினால் முஸ்லிம் சமுதாயம் மட்டும் அல்லாமல் இந்து உள்பட அனைத்து சமுதாய மக்களும், குறிப்பாக பெண்கள் அதிக அளவு பாதிக்கப்படகூடும். ஆகையால் நாம், நம் குடும்பத்தை பாதுகாத்து கொள்ள இந்த போராட்டத்தை கையில் எடுத்துள்ளோம் என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். நாம், நம்மை பாதுகாத்து கொள்ள இந்த கையெழுத்து இயக்கத்தை வெற்றி பெற செய்ய வேண்டும்

இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து அவர் ஏரல் பஜாரில் கடை, கடையாக ஏறி இறங்கி வியாபாரிகளிடம் கையெழுத்து வாங்கினார். நிகழ்ச்சியில் தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் காவல்காடு சொர்ணகுமார், ஒன்றிய செயலாளர் செங்குழி ரமேஷ், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், ஸ்ரீவைகுண்டம் ஒன்றிய துணை செயலாளர் வாழவல்லான் மகராஜன், விடுதலை சிறுத்தை கட்சி மண்டல அமைப்பாளர் தமிழினியன், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் செல்வம் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.










வெள்ளி, 18 அக்டோபர், 2019

ஏரல் அருகே கோயில் விழாவில் வாலிபரை வெட்டிய 4 மாணவர்கள் கைது

ஏரல், அக். 18:  தூத்துக்குடி  மாவட்டம் புதுக்கோட்டை அடுத்த உள்ள குலையன்கரிசலை சேர்ந்த ஆல்பர்ட்  மகன் சிலம்பரசன் (24), பொன்துரை மகன் அருணாசலம் (19), பிரபாகரன் மகன்  விக்னேஷ் (19), மணிராஜ் மகன் ரூபன் (18), ஆகியோர் கல்லூரி மற்றும்  பாலிடெக்னிக்கில் படித்து வருகிறார்கள். விக்னேஷ் மட்டும் ஐடிஐ  முடித்துள்ளார்.  இவர்கள் 4 பேரும் கடந்த 15ம் தேதி ஏரல் அடுத்த மாரமங்கலம் எலும்பன் மாடசாமி  கோயில் கொடைவிழாவில் பங்கேற்றனர். அப்போது இவ்விழாவில் கலந்து கொண்ட அகரம் மேற்குத் தெருவைச் சேர்ந்த சேர்மத்துரை மகன் பாண்டி என்ற  சேர்மபாண்டி (28) என்பவரது பைக்கை நேற்று முன்தினம் அதிகாலை 3  மணிக்கு மாணவர்கள் 4 பேரும் தள்ளி விட்டதாகத் தெரிகிறது.
 இதை பாண்டி  தட்டிக்கேட்ட போது அவருக்கும், இவர்களுக்கும் ஏற்பட்ட தகராறை கொடை விழாவிற்கு வந்தவர்கள் சமரசப்படுத்தினர். இதையடுத்து பாண்டி தனது பைக் அருகே தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது  அங்கு சென்ற மாணவர்கள் 4 பேரும் மீண்டும் தகராறில் ஈடுபட்டதோடு அரிவாளால் சரமாரியாக வெட்டினராம். இதில் படுகாயமடைந்த பாண்டி  தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். புகாரின் பேரில் வழக்குப் பதிந்த ஏரல்  இன்ஸ்பெக்டர் பட்டாணி, 4 பேரையும் கைது செய்தார். அடுத்தடுத்த நடந்த சம்பவங்களால் கொடை  விழாவில் பெரும் பரபரப்பு நிலவியது.

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக பரவலாக மழை

தூத்துக்குடியில் பலத்த மழை உப்பாற்று ஓடையில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது
தூத்துக்குடியில் பெய்த பலத்த மழை காரணமாக உப்பாற்று ஓடையில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. எட்டயபுரம் தெப்பக்குளம் நிரம்பியது.
தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் வயல்வெளிகளில் தண்ணீர் தேங்க தொடங்கி உள்ளது. தூத்துக்குடியில் உள்ள உப்பளங்கள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கி உள்ளன. நகரின் தாழ்வான இடங்களில் மழைநீர் குளம் போல் தேங்கி கிடக்கிறது.
நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று அதிகாலை வரை தொடர்ச்சியாக மழை பெய்தது. இந்த மழை காரணமாக தூத்துக்குடி அருகே உள்ள உப்பாற்று ஓடையில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இந்த வெள்ளம் கோரம்பள்ளம் குளத்துக்கு வந்து சேர்ந்தது. இதனால் குளத்துக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. நேற்று காலையில் வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. மதியத்துக்கு பிறகு வெயில் அடித்தது.

எட்டயபுரம், கோவில்பட்டி, விளாத்திகுளம், கயத்தாறு, கடம்பூர், கழுகுமலை, ஸ்ரீவைகுண்டம், சாத்தான்குளம், திருச்செந்தூர், காயல்பட்டினம், தென்திருப்பேரை, ஆழ்வார்திருநகரி உள்ளிட்ட இடங்களிலும் நேற்று முன்தினம் இரவில் பெய்ய தொடங்கிய மழை விடிய விடிய பெய்தது.

எட்டயபுரத்தில் அதிகபட்சமாக 137 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. இந்த மழையால் எட்டயபுரம் சிவசங்கரன்பிள்ளை ஓடையில் நீர்வரத்து அதிகரித்தது. அங்கிருந்து எட்டயபுரம் தெப்பக்குளத்துக்கு அதிகளவு தண்ணீர் சென்றதால், தெப்பக்குளம் நிரம்பி வழிந்து, மறுகால் பாய்ந்தது.

எட்டயபுரம் பாண்டியன் கண்மாய்க்கும் நீர்வரத்து அதிகரித்ததால், நிரம்பும் தருவாயில் இருந்தது. இதையடுத்து அந்த கண்மாயை எட்டயபுரம் தாசில்தார் அழகர், நகர பஞ்சாயத்து நிர்வாக அலுவலர் சுந்தரவேல் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இதேபோன்று கயத்தாறு அருகே முடுக்கலாங்குளம், தொட்டம்பட்டி, செவல்பட்டி, போடுபட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஓடை தடுப்பணைகளும் நிரம்பி வழிந்தன. இதனால் அங்குள்ள குளங்களுக்கு செல்லும் நீர்வரத்து அதிகரித்தது. இதையடுத்து அவற்றை வருவாய் துறையினர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பலத்த மழையால் விவசாயிகள், பொதுமக்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தனர்.

மாவட்டத்தில் நேற்று முன்தினம் காலை 8 மணி நிலவரப்படி முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:-

எட்டயபுரம் - 137
திருச்செந்தூர் - 46
குலசேகரன்பட்டினம்- 7
காயல்பட்டினம் - 55
விளாத்திகுளம் - 74
காடல்குடி - 32
வைப்பார் - 36
சூரங்குடி - 41
கோவில்பட்டி - 48.5
கயத்தாறு - 49
கடம்பூர் - 40
கழுகுமலை - 33
ஓட்டப்பிடாரம் - 46
மணியாச்சி - 40.5
வேடநத்தம் - 25
கீழஅரசடி - 10
சாத்தான்குளம் - 38
ஸ்ரீவைகுண்டம் - 35.1
தூத்துக்குடி - 50.3




ஏரலில் தாமிரபரணி ஆற்றை தூய்மைப்படுத்தும் பணி - கலெக்டர் சந்தீப் நந்தூரி தொடங்கி வைத்தார்

தாமிரபரணி ஆற்றை தூய்மைப்படுத்தும் பணி - கலெக்டர் சந்தீப் நந்தூரி தொடங்கி வைத்தார்
தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றை தூய்மைப்படுத்தும் பணியை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தொடங்கி வைத்தார்.
ஸ்ரீவைகுண்டம், அக்.18-

பொதிகை மலையில் பிறந்து நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களை வளம் கொழிக்க செய்யும் தாமிரபரணி நதியானது புன்னக்காயல் கடலில் சங்கமிக்கிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் மருதூர் அணையில் இருந்து புன்னக்காயல் வரையிலும் சுமார் 60 கிலோ மீட்டர் தூரத்துக்கு தாமிரபரணி ஆறு பாய்கிறது.\

தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றை தூய்மைப்படுத்தும் பணி நேற்று தொடங்கியது. இதற்காக மருதூர் அணையில் இருந்து புன்னக்காயல் வரையிலும் 45 இடங்களில் தாமிரபரணி ஆற்றை தூய்மைப்படுத்தும் பணி நடந்தது.

ஸ்ரீவைகுண்டம் திருமஞ்சன படித்துறையில் நடந்த நிகழ்ச்சியில், மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கி, கொடியசைத்து தூய்மை பணியை தொடங்கி வைத்தார். தொடர்ந்து பொக்லைன் எந்திரங்கள் மூலம் தாமிரபரணி ஆற்றில் உள்ள அமலைச்செடிகள், சீமைக்கருவேல மரங்கள் போன்றவற்றை அகற்றி சுத்தம் செய்யும் பணி நடந்தது.

பின்னர் மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி நிருபர்களிடம் கூறியதாவது:-

வற்றாத ஜீவ நதியான தாமிரபரணியை தூய்மைப்படுத்தும் திட்டம், நெல்லை மாவட்டத்தில் தொடங்கப்பட்டு, வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது. தற்போது தூத்துக்குடி மாவட்டத்திலும் தாமிரபரணி ஆற்றை தூய்மைப்படுத்தும் பணியை நீட்டித்து உள்ளோம்.

அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றை தூய்மைப்படுத்தும் பணி, 45 இடங்களில் 3 நாட்கள் நடைபெறும். முதல் 2 நாட்கள் முழுவதும், பொக்லைன் எந்திரங்கள் மூலம், தாமிரபரணி ஆற்றின் கரையில் உள்ள சீமைக்கருவேல மரங்கள், அமலைச்செடிகளை அகற்றி தூய்மைப்படுத்துவோம்.

3-வது நாளில் மாணவ-மாணவிகள், பொதுமக்கள் மூலம் தாமிரபரணி ஆற்றை சுத்தம் செய்யும் பணி நடைபெறும். இந்த திட்டத்தை நிறைவேற்றுவதற்கு அரசு பொதுத்துறை நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் ஆகியவை தங்களது சமூக பொறுப்பு நிதியை வழங்கி உள்ளன.

இந்த பணிக்காக என்.எல்.சி. நிறுவனம், தமிழ்நாடு மின்உற்பத்தி நிறுவனம் ஆகியவை தலா ரூ.1 கோடி சமூக பொறுப்பு நிதியை வழங்கியது. தற்போது தாமிரபரணி ஆற்றில் 88 பொக்லைன் எந்திரங்கள் மூலம் தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. தாமிரபரணி ஆற்றை சுத்தமாக பராமரிப்பது குறித்து மாணவ-மாணவிகளிடமும், பொதுமக்களிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். இவ்வாறு கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறினார்.

நிகழ்ச்சியில் கூடுதல் கலெக்டர் (வருவாய்) வி‌‌ஷ்ணு சந்திரன், தூத்துக்குடி உதவி கலெக்டர் சிம்ரான்ஜீத்சிங் கலோன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தனபதி, நகர பஞ்சாயத்துகளின் உதவி இயக்குனர் மாஹின் அபுபக்கர், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் கிரு‌‌ஷ்ணகுமார், ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் சந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

முறப்பநாடு, அகரம், வல்லநாடு, பக்கபட்டி, நாணல்காடு, ஆழிகுடி, அனந்தநம்பிகுறிச்சி, மணக்கரை, முத்தாலங்குறிச்சி, ஆறாம்பண்ணை, கருங்குளம், கொங்கராயகுறிச்சி, புளியங்குளம், ஆதிச்சநல்லூர், பொன்னங்குறிச்சி, தோழப்பன்பண்ணை, நவலட்சுமிபுரம், மாட்டுதாவணி, ஆழ்வார்திருநகரி, ஆழ்வார்தோப்பு, பால்குளம், சிவராமமங்கலம், இரட்டை திருப்பதி, தென்திருப்பேரை, குரங்கணி, மங்களகுறிச்சி, ஏரல், ராஜபதி, உமரிக்காடு, முக்காணி, ஆத்தூர், சேர்ந்தபூமங்கலம், புன்னக்காயல் உள்ளிட்ட இடங்களிலும் தாமிரபரணி ஆற்றை தூய்மைப்படுத்தும் பணி நேற்று தொடங்கியது. தொடர்ந்து இன்றும் (வெள்ளிக்கிழமை), நாளையும் (சனிக்கிழமை) தூய்மை பணிகள் நடைபெறுகிறது.





செவ்வாய், 1 அக்டோபர், 2019

ஏரல் அருகே சிறுத்தொண்டநல்லூர் முத்துமாலை அம்மன் கோயிலில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்





ஏரல், அக். 1: சிறுத்தொண்டநல்லூர் முத்துமாலை அம்மன் கோயிலில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஏரல் அருகே உள்ள சிறுத்தொண்டநல்லூர் முத்துமாலை அம்மன் கோயிலில், தசரா திருவிழா கொடியேற்ற நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி காலையில் தாமிரபரணி ஆற்றில் இருந்து காளி அம்மன் கொடியுடன் ஏரல் நகர் வீதி மற்றும் சிறுத்தொண்டநல்லூரில் நகர் வலம் வரும் நிகழ்ச்சி நடந்தது. இரவு அம்மன் கோயில் வளாகத்தில் கொடியேற்ற நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடந்தது. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஊர் மக்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.

தசரா திருவிழாவை முன்னிட்டு தினமும் அம்மனுக்கு சிறப்பு பூஜை நடக்கிறது. முக்கிய திருவிழாக்கள், 8 மற்றும் 9ம் தேதி நடக்கிறது. 8ம் தேதி (செவ்வாய்க்கிழமை) இரவு 8 மணிக்கு நையாண்டி மேளம் மற்றும் கரகாட்டம், நள்ளிரவு 1 மணிக்கு அம்மனுக்கு தசரா சிறப்பு பூஜை, இரவு 2 மணிக்கு அம்மன் கற்பக பொன் சப்பரத்தில் எழுந்தருளி சிறுத்தொண்டநல்லூரில் நகர் உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது. 9ம் தேதி (புதன்கிழமை) காலை 7.30 மணிக்கு அம்மன் கற்பக பொன் சப்பரத்தில் ஏரல் நட்டார் அம்மன் கோயில் வந்து சேருதல், காலை 8 மணிக்கு ஏரல் நட்டார் அம்மன் கோயிலில் சிறப்பு பூஜை, 9 மணிக்கு அம்மன் ஏரல் நகர் உலா வரும் நிகழ்ச்சி, 10 மணிக்கு ஏரல் சவுக்கை முத்தாரம்மன் கோயில் வந்தடைந்து தாகசாந்தி மற்றும் சிறப்பு பூஜையும் நடக்கிறது.

காலை 11 மணிக்கு அம்மன் கடைத்தெருவில் உலா வந்து சேனையர் சமுதாய உச்சினிமாகாளி அம்மன் கோயிலுக்கு வந்தடைகிறது. அங்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டு பகல் 2 மணிக்கு ஏரல் பேட்டை பந்தலில் வந்து அமரும் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 6 மணிக்கு அம்மனுக்கு ஏரல் சேர்மன் அருணாசல சுவாமி கோயில் சார்பாக அபிஷேகம் நடத்தப்பட்டு, சிறப்பு பூஜை நடக்கிறது. இரவு 9 மணிக்கு அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி ஏரல் நகர்வீதி வழியாக சென்று அதிகாலை 3 மணிக்கு சிறுத்தொண்டநல்லூர் கோயில் வந்து அமரும் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து சிறப்பு பூஜை நடத்தப்பட்டு பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை விழாக் குழுவினர் செய்து வருகின்றனர்.

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...