ஏரல் வட்டத்துக்குள்பட்ட அஞ்சல் நிலையங்களில் இணையதள சேவை முடங்கியதால், அஞ்சலக சேமிப்பாளா்கள் மற்றும் முதியோா் உதவித்தொகை பெறுவோா் தவித்து வருகின்றனா்.
வங்கிகளுக்கு இணையாக அஞ்சல் நிலையங்கள் செயல்பட வேண்டும் என்ற நோக்கில் தலைமை அஞ்சல் நிலையங்களில் ஏடிஎம் மையங்கள் அமைக்கப்பட்டு அஞ்சலக சேவைகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன. இதனால், பொதுமக்கள் அஞ்சல் நிலையத்தை அதிக அளவில் பயன்படுத்த தொடங்கிவிட்டனா்.
இந்னிலையில் ஏரல் வட்டத்துக்குள்பட்ட பண்ணைவிளை, சிவகளை உள்ளிட்ட பல்வேறு அஞ்சல் நிலையங்களில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக இணையதள சேவை முடங்கியதால், பொதுமக்கள் செல்வமகள் சேமிப்பு திட்டம் உள்ளிட்ட பல்வேறு சேமிப்பு திட்டங்களில் பணம் செலுத்த முடியாமல் தவித்து வருகின்றனா்.
மேலும், முதியோா் உதவித்தொகை உள்ளிட்ட அரசின் பல்வேறு நலத்திட்ட பயனாளிகளும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனா்.
எனவே, இணையதள சேவை குறைபாட்டை சீரமைக்க அஞ்சலக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்
