வெள்ளி, 18 அக்டோபர், 2019

ஏரல் அருகே கோயில் விழாவில் வாலிபரை வெட்டிய 4 மாணவர்கள் கைது

ஏரல், அக். 18:  தூத்துக்குடி  மாவட்டம் புதுக்கோட்டை அடுத்த உள்ள குலையன்கரிசலை சேர்ந்த ஆல்பர்ட்  மகன் சிலம்பரசன் (24), பொன்துரை மகன் அருணாசலம் (19), பிரபாகரன் மகன்  விக்னேஷ் (19), மணிராஜ் மகன் ரூபன் (18), ஆகியோர் கல்லூரி மற்றும்  பாலிடெக்னிக்கில் படித்து வருகிறார்கள். விக்னேஷ் மட்டும் ஐடிஐ  முடித்துள்ளார்.  இவர்கள் 4 பேரும் கடந்த 15ம் தேதி ஏரல் அடுத்த மாரமங்கலம் எலும்பன் மாடசாமி  கோயில் கொடைவிழாவில் பங்கேற்றனர். அப்போது இவ்விழாவில் கலந்து கொண்ட அகரம் மேற்குத் தெருவைச் சேர்ந்த சேர்மத்துரை மகன் பாண்டி என்ற  சேர்மபாண்டி (28) என்பவரது பைக்கை நேற்று முன்தினம் அதிகாலை 3  மணிக்கு மாணவர்கள் 4 பேரும் தள்ளி விட்டதாகத் தெரிகிறது.
 இதை பாண்டி  தட்டிக்கேட்ட போது அவருக்கும், இவர்களுக்கும் ஏற்பட்ட தகராறை கொடை விழாவிற்கு வந்தவர்கள் சமரசப்படுத்தினர். இதையடுத்து பாண்டி தனது பைக் அருகே தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது  அங்கு சென்ற மாணவர்கள் 4 பேரும் மீண்டும் தகராறில் ஈடுபட்டதோடு அரிவாளால் சரமாரியாக வெட்டினராம். இதில் படுகாயமடைந்த பாண்டி  தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். புகாரின் பேரில் வழக்குப் பதிந்த ஏரல்  இன்ஸ்பெக்டர் பட்டாணி, 4 பேரையும் கைது செய்தார். அடுத்தடுத்த நடந்த சம்பவங்களால் கொடை  விழாவில் பெரும் பரபரப்பு நிலவியது.

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக பரவலாக மழை

தூத்துக்குடியில் பலத்த மழை உப்பாற்று ஓடையில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது
தூத்துக்குடியில் பெய்த பலத்த மழை காரணமாக உப்பாற்று ஓடையில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. எட்டயபுரம் தெப்பக்குளம் நிரம்பியது.
தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் வயல்வெளிகளில் தண்ணீர் தேங்க தொடங்கி உள்ளது. தூத்துக்குடியில் உள்ள உப்பளங்கள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கி உள்ளன. நகரின் தாழ்வான இடங்களில் மழைநீர் குளம் போல் தேங்கி கிடக்கிறது.
நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று அதிகாலை வரை தொடர்ச்சியாக மழை பெய்தது. இந்த மழை காரணமாக தூத்துக்குடி அருகே உள்ள உப்பாற்று ஓடையில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இந்த வெள்ளம் கோரம்பள்ளம் குளத்துக்கு வந்து சேர்ந்தது. இதனால் குளத்துக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. நேற்று காலையில் வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. மதியத்துக்கு பிறகு வெயில் அடித்தது.

எட்டயபுரம், கோவில்பட்டி, விளாத்திகுளம், கயத்தாறு, கடம்பூர், கழுகுமலை, ஸ்ரீவைகுண்டம், சாத்தான்குளம், திருச்செந்தூர், காயல்பட்டினம், தென்திருப்பேரை, ஆழ்வார்திருநகரி உள்ளிட்ட இடங்களிலும் நேற்று முன்தினம் இரவில் பெய்ய தொடங்கிய மழை விடிய விடிய பெய்தது.

எட்டயபுரத்தில் அதிகபட்சமாக 137 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. இந்த மழையால் எட்டயபுரம் சிவசங்கரன்பிள்ளை ஓடையில் நீர்வரத்து அதிகரித்தது. அங்கிருந்து எட்டயபுரம் தெப்பக்குளத்துக்கு அதிகளவு தண்ணீர் சென்றதால், தெப்பக்குளம் நிரம்பி வழிந்து, மறுகால் பாய்ந்தது.

எட்டயபுரம் பாண்டியன் கண்மாய்க்கும் நீர்வரத்து அதிகரித்ததால், நிரம்பும் தருவாயில் இருந்தது. இதையடுத்து அந்த கண்மாயை எட்டயபுரம் தாசில்தார் அழகர், நகர பஞ்சாயத்து நிர்வாக அலுவலர் சுந்தரவேல் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இதேபோன்று கயத்தாறு அருகே முடுக்கலாங்குளம், தொட்டம்பட்டி, செவல்பட்டி, போடுபட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஓடை தடுப்பணைகளும் நிரம்பி வழிந்தன. இதனால் அங்குள்ள குளங்களுக்கு செல்லும் நீர்வரத்து அதிகரித்தது. இதையடுத்து அவற்றை வருவாய் துறையினர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பலத்த மழையால் விவசாயிகள், பொதுமக்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தனர்.

மாவட்டத்தில் நேற்று முன்தினம் காலை 8 மணி நிலவரப்படி முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:-

எட்டயபுரம் - 137
திருச்செந்தூர் - 46
குலசேகரன்பட்டினம்- 7
காயல்பட்டினம் - 55
விளாத்திகுளம் - 74
காடல்குடி - 32
வைப்பார் - 36
சூரங்குடி - 41
கோவில்பட்டி - 48.5
கயத்தாறு - 49
கடம்பூர் - 40
கழுகுமலை - 33
ஓட்டப்பிடாரம் - 46
மணியாச்சி - 40.5
வேடநத்தம் - 25
கீழஅரசடி - 10
சாத்தான்குளம் - 38
ஸ்ரீவைகுண்டம் - 35.1
தூத்துக்குடி - 50.3




ஏரலில் தாமிரபரணி ஆற்றை தூய்மைப்படுத்தும் பணி - கலெக்டர் சந்தீப் நந்தூரி தொடங்கி வைத்தார்

தாமிரபரணி ஆற்றை தூய்மைப்படுத்தும் பணி - கலெக்டர் சந்தீப் நந்தூரி தொடங்கி வைத்தார்
தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றை தூய்மைப்படுத்தும் பணியை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தொடங்கி வைத்தார்.
ஸ்ரீவைகுண்டம், அக்.18-

பொதிகை மலையில் பிறந்து நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களை வளம் கொழிக்க செய்யும் தாமிரபரணி நதியானது புன்னக்காயல் கடலில் சங்கமிக்கிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் மருதூர் அணையில் இருந்து புன்னக்காயல் வரையிலும் சுமார் 60 கிலோ மீட்டர் தூரத்துக்கு தாமிரபரணி ஆறு பாய்கிறது.\

தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றை தூய்மைப்படுத்தும் பணி நேற்று தொடங்கியது. இதற்காக மருதூர் அணையில் இருந்து புன்னக்காயல் வரையிலும் 45 இடங்களில் தாமிரபரணி ஆற்றை தூய்மைப்படுத்தும் பணி நடந்தது.

ஸ்ரீவைகுண்டம் திருமஞ்சன படித்துறையில் நடந்த நிகழ்ச்சியில், மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கி, கொடியசைத்து தூய்மை பணியை தொடங்கி வைத்தார். தொடர்ந்து பொக்லைன் எந்திரங்கள் மூலம் தாமிரபரணி ஆற்றில் உள்ள அமலைச்செடிகள், சீமைக்கருவேல மரங்கள் போன்றவற்றை அகற்றி சுத்தம் செய்யும் பணி நடந்தது.

பின்னர் மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி நிருபர்களிடம் கூறியதாவது:-

வற்றாத ஜீவ நதியான தாமிரபரணியை தூய்மைப்படுத்தும் திட்டம், நெல்லை மாவட்டத்தில் தொடங்கப்பட்டு, வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது. தற்போது தூத்துக்குடி மாவட்டத்திலும் தாமிரபரணி ஆற்றை தூய்மைப்படுத்தும் பணியை நீட்டித்து உள்ளோம்.

அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றை தூய்மைப்படுத்தும் பணி, 45 இடங்களில் 3 நாட்கள் நடைபெறும். முதல் 2 நாட்கள் முழுவதும், பொக்லைன் எந்திரங்கள் மூலம், தாமிரபரணி ஆற்றின் கரையில் உள்ள சீமைக்கருவேல மரங்கள், அமலைச்செடிகளை அகற்றி தூய்மைப்படுத்துவோம்.

3-வது நாளில் மாணவ-மாணவிகள், பொதுமக்கள் மூலம் தாமிரபரணி ஆற்றை சுத்தம் செய்யும் பணி நடைபெறும். இந்த திட்டத்தை நிறைவேற்றுவதற்கு அரசு பொதுத்துறை நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் ஆகியவை தங்களது சமூக பொறுப்பு நிதியை வழங்கி உள்ளன.

இந்த பணிக்காக என்.எல்.சி. நிறுவனம், தமிழ்நாடு மின்உற்பத்தி நிறுவனம் ஆகியவை தலா ரூ.1 கோடி சமூக பொறுப்பு நிதியை வழங்கியது. தற்போது தாமிரபரணி ஆற்றில் 88 பொக்லைன் எந்திரங்கள் மூலம் தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. தாமிரபரணி ஆற்றை சுத்தமாக பராமரிப்பது குறித்து மாணவ-மாணவிகளிடமும், பொதுமக்களிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். இவ்வாறு கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறினார்.

நிகழ்ச்சியில் கூடுதல் கலெக்டர் (வருவாய்) வி‌‌ஷ்ணு சந்திரன், தூத்துக்குடி உதவி கலெக்டர் சிம்ரான்ஜீத்சிங் கலோன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தனபதி, நகர பஞ்சாயத்துகளின் உதவி இயக்குனர் மாஹின் அபுபக்கர், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் கிரு‌‌ஷ்ணகுமார், ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் சந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

முறப்பநாடு, அகரம், வல்லநாடு, பக்கபட்டி, நாணல்காடு, ஆழிகுடி, அனந்தநம்பிகுறிச்சி, மணக்கரை, முத்தாலங்குறிச்சி, ஆறாம்பண்ணை, கருங்குளம், கொங்கராயகுறிச்சி, புளியங்குளம், ஆதிச்சநல்லூர், பொன்னங்குறிச்சி, தோழப்பன்பண்ணை, நவலட்சுமிபுரம், மாட்டுதாவணி, ஆழ்வார்திருநகரி, ஆழ்வார்தோப்பு, பால்குளம், சிவராமமங்கலம், இரட்டை திருப்பதி, தென்திருப்பேரை, குரங்கணி, மங்களகுறிச்சி, ஏரல், ராஜபதி, உமரிக்காடு, முக்காணி, ஆத்தூர், சேர்ந்தபூமங்கலம், புன்னக்காயல் உள்ளிட்ட இடங்களிலும் தாமிரபரணி ஆற்றை தூய்மைப்படுத்தும் பணி நேற்று தொடங்கியது. தொடர்ந்து இன்றும் (வெள்ளிக்கிழமை), நாளையும் (சனிக்கிழமை) தூய்மை பணிகள் நடைபெறுகிறது.





செவ்வாய், 1 அக்டோபர், 2019

ஏரல் அருகே சிறுத்தொண்டநல்லூர் முத்துமாலை அம்மன் கோயிலில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்





ஏரல், அக். 1: சிறுத்தொண்டநல்லூர் முத்துமாலை அம்மன் கோயிலில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஏரல் அருகே உள்ள சிறுத்தொண்டநல்லூர் முத்துமாலை அம்மன் கோயிலில், தசரா திருவிழா கொடியேற்ற நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி காலையில் தாமிரபரணி ஆற்றில் இருந்து காளி அம்மன் கொடியுடன் ஏரல் நகர் வீதி மற்றும் சிறுத்தொண்டநல்லூரில் நகர் வலம் வரும் நிகழ்ச்சி நடந்தது. இரவு அம்மன் கோயில் வளாகத்தில் கொடியேற்ற நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடந்தது. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஊர் மக்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.

தசரா திருவிழாவை முன்னிட்டு தினமும் அம்மனுக்கு சிறப்பு பூஜை நடக்கிறது. முக்கிய திருவிழாக்கள், 8 மற்றும் 9ம் தேதி நடக்கிறது. 8ம் தேதி (செவ்வாய்க்கிழமை) இரவு 8 மணிக்கு நையாண்டி மேளம் மற்றும் கரகாட்டம், நள்ளிரவு 1 மணிக்கு அம்மனுக்கு தசரா சிறப்பு பூஜை, இரவு 2 மணிக்கு அம்மன் கற்பக பொன் சப்பரத்தில் எழுந்தருளி சிறுத்தொண்டநல்லூரில் நகர் உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது. 9ம் தேதி (புதன்கிழமை) காலை 7.30 மணிக்கு அம்மன் கற்பக பொன் சப்பரத்தில் ஏரல் நட்டார் அம்மன் கோயில் வந்து சேருதல், காலை 8 மணிக்கு ஏரல் நட்டார் அம்மன் கோயிலில் சிறப்பு பூஜை, 9 மணிக்கு அம்மன் ஏரல் நகர் உலா வரும் நிகழ்ச்சி, 10 மணிக்கு ஏரல் சவுக்கை முத்தாரம்மன் கோயில் வந்தடைந்து தாகசாந்தி மற்றும் சிறப்பு பூஜையும் நடக்கிறது.

காலை 11 மணிக்கு அம்மன் கடைத்தெருவில் உலா வந்து சேனையர் சமுதாய உச்சினிமாகாளி அம்மன் கோயிலுக்கு வந்தடைகிறது. அங்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டு பகல் 2 மணிக்கு ஏரல் பேட்டை பந்தலில் வந்து அமரும் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 6 மணிக்கு அம்மனுக்கு ஏரல் சேர்மன் அருணாசல சுவாமி கோயில் சார்பாக அபிஷேகம் நடத்தப்பட்டு, சிறப்பு பூஜை நடக்கிறது. இரவு 9 மணிக்கு அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி ஏரல் நகர்வீதி வழியாக சென்று அதிகாலை 3 மணிக்கு சிறுத்தொண்டநல்லூர் கோயில் வந்து அமரும் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து சிறப்பு பூஜை நடத்தப்பட்டு பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை விழாக் குழுவினர் செய்து வருகின்றனர்.

திங்கள், 30 செப்டம்பர், 2019

ஏரல் அருகே தூர்வாரப்படாததால் கருவேலமரங்கள் ஆக்கிரமித்த அகரம் குளம்







ஏரல், செப்.30: ஏரல் அருகேயுள்ள அகரம் குளம் தூர்வாரப்படாததால் சீமை கருவேல மரங்கள் ஆக்கிரமிப்பு, மணல் மேடானதால் குளத்தில் தண்ணீர் தேக்க முடியவில்லை.  குளத்தை சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.ஏரல் அருகேயுள்ள சுமார் 75 ஏக்கர் பரப்பளவு கொண்ட அகரம் குளத்தின் மூலம் 250 ஏக்கரில் விவசாயம் நடந்து வந்தது. இந்த குளத்திற்கு வைகுண்டம் வடகால் மூலம் ஆறுமுகமங்கலம் குளத்திற்கு தண்ணீர் வந்து அங்குள்ள 3ம் நம்பர் மடை வழியாக தண்ணீர் வருகிறது. குளத்தில் தண்ணீர் இருக்கும் போது இப்பகுதிகளில் நிலத்தடிநீர் உயர்ந்து தண்ணீர் தட்டுப்பாடின்றி கிடைத்தது. இதனால் இப்பகுதியில் வாழை, தென்னை மரங்கள் செழித்து வளர்ந்தன. இந்த குளம் பல ஆண்டுகளாக தூர்வாராததால் மணல் மேடுகளாக மாறியது. மேலும் சீமை கருவேலமரங்கள் ஆக்கிரமித்து குளம் இருந்த இடம் தெரியாமல் காடு போல் உள்ளது.
இதனால் குளத்தில் அதிகளவு தண்ணீர் தேக்கி வைக்க முடிவதில்லை. ஒரு மாத விவசாயத்திற்கு கூட தண்ணீர் போதுமானதாக இல்லாததால் கடும் வறட்சி ஏற்பட்டு தென்னைகள் பட்டுப்போய் உள்ளது. வாழை, நெல் விவசாயம் கேள்வி குறியாகிவிட்டது.  

குளத்தில் தண்ணீர் இல்லாததால் நிலத்தடிநீரும் வற்றி உவர்ப்பாக மாறி வருகிறது. வைகுண்டம் வடகாலில் முறையாக தண்ணீர் வராததாலும், மழைக்காலத்தில் வரும் தண்ணீரை அதிகளவு குளத்தில் சேமித்து வைக்க முடியாத நிலையில் குளம் மணல் மேடாக உள்ளதால் எப்போதும் குளம் வறண்ட நிலையிலேயே உள்ளது. இதனால் அகரம் பகுதி விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே அரசு குளத்தில் வளர்ந்துள்ள முள்செடிகள், மணல் மேடுகளை அகற்றி தூர்வாரி சீரமைத்திட நடவடிக்கை எடுத்திட வேண்டும் விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.வைகுண்டம் ஒன்றிய திமுக விவசாய அணி துணை அமைப்பாளர் அகரம் பாஸ்கர் கூறியிருப்பதாவது:

தூத்துக்குடி மாவட்டத்தில் ஆண்டுக்காண்டு பருவமழை பொய்த்து வருவதாலும், வைகுண்டம் வடகாலில் முறையாக தண்ணீர் வராததினாலும் அகரம் குளத்திற்கு தண்ணீர் வந்து சேர்வதில்லை. மேலும் குளத்தில் கருவேல மரங்கள் ஆக்கிரமித்துள்ளதால் காடு போல் உள்ளது. குளமும் தூர்வாரப்படாததால் மணல் திட்டுகள் ஏற்பட்டு அதிகளவு தண்ணீரை சேமிக்க முடிவதில்லை. இதனால் இப்பகுதியில் விவசாயம் கேள்விக்குறியாகி உள்ளது. அரசு உடனடியாக அகரம் குளத்தை ஆக்கிரமித்துள்ள முள்செடிகளை அப்புறப்படுத்தி, தூர்வாரி அதிகளவு தண்ணீரை சேமிக்க நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்றார்.

புதன், 25 செப்டம்பர், 2019

ஏரல் தாமிரபரணியில் அலைச்செடிகள் அகற்றம்



ஏரல், செப். 25: நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக என்எஸ்எஸ் சார்பில் 50வது ஆண்டு பொன்விழா என்எஸ்எஸ்  நாளினை முன்னிட்டு தாமிரபரணி தூய்மை பணி திட்ட துவக்க விழா ஏரலில் நடந்தது. துவக்க விழாவிற்கு ஆதித்தனார்  கல்லூரி என்எஸ்எஸ்  அலுவலர் கதிரேசன் வரவேற்றார். வட்டார வளர்ச்சி அலுவலர் நாகராஜன், பல்கலைக்கழக சமூகவியல்துறை இணைப் பேராசிரியர் முருகேசன் முன்னிலை வகித்தனர். தூய்மை பணியினை என்எஸ்எஸ் ஒருங்கிணைப்பாளர் ராஜரத்தினம் துவக்கி வைத்தார்.

இதில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்திற்கு உட்பட்ட தூத்துக்குடி காமராஜ் கல்லூரி, வ.உ.சி கல்லூரி, தூய சவேரியார் கல்லூரி, கீதாஜீவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திருச்செந்தூர் கல்லூரி, சாயர்புரம் போப் கல்லூரி, பிஷப் கால்டுவெல் கல்லூரி, கே.ஜி.எஸ் கலைக்கல்லூரிகளைச் சேர்ந்த 600 மாணவ, மாணவிகள் பங்கேற்று ஆற்றில் தூய்மை பணிகளை மேற்கொண்டனர். இதில் ஏரல் சேர்மன் கோயில் பகுதியில் தாமிரபரணி ஆற்றுப்பகுதியில் கிடந்த பிளாஸ்டிக் பொருட்கள், நச்சுக்கழிவுகள், அமலை செடிகளை அப்புறப்படுத்தினர்.

நிறைவு விழாவில் பல்கலைக்கழக துணைவேந்தர் பிச்சுமணி தூய்மைப் பணிகளை பார்வையிட்டு மாணவ, மாணவிகளை பாராட்டி பேசுகையில், “நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்திற்கு முக்கிய நீராதாரமாக விளங்ககூடிய தாமிரபரணியை காப்பது நமது கடமை. இந்த பணிகள் தொடர்ந்து செயல்படுத்தப்படும்” என்றார். கீதாஜீவன் எம்.எல்.ஏ, சேர்மன் கோயில் பரம்பரை அக்தார் கருத்தபாண்டிய நாடார், ஏரல் பேரூராட்சி முன்னாள் தலைவர் பாலகிருஷ்ணன் உள்பட பலர் பங்கேற்று மாணவர்களை வாழ்த்தி பேசினார். கீதாஜீவன் கல்லூரி தீபன்குமார் நன்றி கூறினார். ஏற்பாடுகளை பல்கலைக்கழக நாட்டு நலப்பணித்திட்டம், கீதாஜீவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் மலர்விழி செய்திருந்தார்.

திங்கள், 23 செப்டம்பர், 2019

ஏரலில் 450 பயனாளிகளுக்கு ரூ.2 கோடி கடன் - அமைச்சர் கடம்பூர் ராஜூ வழங்கினார்

ஏரலில் 450 பயனாளிகளுக்கு ரூ.2 கோடி கடன் - அமைச்சர் கடம்பூர் ராஜூ வழங்கினார்
ஏரலில் 450 பயனாளிகளுக்கு ரூ.2 கோடி கடன்களை அமைச்சர் கடம்பூர் ராஜூ வழங்கினார்.
ஏரல், 

ஏரல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க கட்டிடம் புதுப்பித்து கட்டப்பட்டு, நவீனமயமாக்கப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தலைமை தாங்கி, புதிய கட்டிடத்தை திறந்து வைத்து, குத்துவிளக்கு ஏற்றினார். சண்முகநாதன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார்.
தொடர்ந்து ஏரலில் உள்ள ஒரு மண்டபத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. விழாவில் அமைச்சர் கடம்பூர் ராஜூ கூட்டுறவு துறை சார்பில் 450 பயனாளிகளுக்கு ரூ.2 கோடி மதிப்பிலான பல்வேறு கடன்களை வழங்கினார். பின்னர் வருவாய் துறை சார்பில் பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா, மின்னணு குடும்ப அட்டை, சமூக பாதுகாப்பு திட்டத்தில் உதவித்தொகை, மானிய விலையில் ஸ்கூட்டர் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மொத்தம் 134 பயனாளிகளுக்கு ரூ.32 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

விழாவில் சின்னப்பன் எம்.எல்.ஏ., ஏரல் தாசில்தார் அற்புதமணி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர், கூட்டுறவு மண்டல இணை பதிவாளர் இந்துமதி, துணை பதிவாளர் ரவீந்திரன், அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் ஆறுமுகநயினார், மாவட்ட இளைஞர் பாசறை இணை செயலாளர் காசிராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.








புதன், 18 செப்டம்பர், 2019

ஏரல் அருகே சாலையோர பள்ளத்துக்குள் கல்லூரி பஸ் பாய்ந்தது: 45 மாணவ-மாணவிகள் உயிர் தப்பினர்

ஏரல் அருகே சாலையோர பள்ளத்துக்குள் கல்லூரி பஸ் பாய்ந்தது: 45 மாணவ-மாணவிகள் உயிர் தப்பினர்
ஏரல் அருகே சாலையோர பள்ளத்துக்குள் கல்லூரி பஸ் பாய்ந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக 45 மாணவ-மாணவிகள் உயிர் தப்பினர்.
ஏரல், 

தூத்துக்குடி அருகே தனியார் பொறியியல் கல்லூரிக்கு சொந்தமான பஸ்சில் நேற்று காலையில் வழக்கம்போல் ஏரலில் இருந்து மாணவ-மாணவிகளை ஏற்றிக் கொண்டு கல்லூரிக்கு புறப்பட்டது. அந்த பஸ்சில் சுமார் 45 மாணவ-மாணவிகள் பயணம் செய்தனர்.
ஏரல் அருகே கொற்கை மணலூர் அருகில் சென்றபோது, எதிரே வந்த வாகனத்துக்கு வழி விடுவதற்காக பஸ்சை சாலையோரமாக டிரைவர் ஒதுக்கினார். அப்போது அந்த பஸ் சாலையோர பள்ளத்துக்குள் கவிழும் நிலை ஏற்பட்டதால், உடனே டிரைவர் பஸ்சை வலதுபுறமாக திருப்பினார். இதனால் அந்த பஸ், சாலையின் வலதுபுற பள்ளத்தில் பாய்ந்து நின்றது.

உடனே பஸ்சில் இருந்த மாணவ-மாணவிகள் அனைவரும் பதறியடித்தவாறு கீழே இறங்கினர். பின்னர் டிராக்டர் மூலம் கயிறு கட்டி, அந்த பஸ்சை சாலைக்கு கொண்டு வந்தனர். பின்னர் அந்த பஸ்சில் மாணவ-மாணவிகள் கல்லூரிக்கு புறப்பட்டு சென்றனர். இதனால் அந்த வழியாக சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

விபத்து நிகழ்ந்த இடத்தின் அருகில் வலதுபுறம் சுமார் 25 அடி ஆழ பள்ளம் உள்ளது. அதிர்ஷ்டவசமாக பஸ் அந்த பள்ளத்தில் பாயாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

ஏரல் அருகே உமரிக்காட்டில் இருந்து கொற்கை குளம் வரையிலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு புதிய சாலை அமைக்கப்பட்டது. குறுகலான இந்த சாலையின் இருபுறமும் சரள் மண் முறையாக பரப்பப்படாததால், அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது.

எனவே சாலையின் இருபுறமும் சரள் மண்ணை முறையாக பரப்ப வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.




திங்கள், 16 செப்டம்பர், 2019

ஏரல் ஸ்ரீவைகுண்டம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. நேற்றும் மாவட்டத்தில் பல பகுதிகளில் மழை:உப்பளங்கள் தண்ணீரில் மூழ்கினஉற்பத்தி பாதிப்பு

தூத்துக்குடி பகுதியில் பரவலாக மழை:உப்பளங்கள் தண்ணீரில் மூழ்கினஉற்பத்தி பாதிப்பு
ஏரல், ஸ்ரீவைகுண்டம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. நேற்றும் மாவட்டத்தில் பல பகுதிகளில் மழை செய்து. ஏரல் பகுதியில் நேற்று மாலை 3.30 மணிக்கு தொடங்கிய மழை 4 மணி வரை பெய்தது. இதனால் ஏரல் பஜார் பகுதி, பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் குளம் போல் தேங்கியது. 
தூத்துக்குடி பகுதியில் கடந்த 2 நாட்களாக பெய்து வரும் மழையால் உப்பளங்கள் தண்ணீரில் மூழ்கின. இதனால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது.
தூத்துக்குடி, 

தூத்துக்குடி பகுதியில் கடந்த 2 நாட்களாக பெய்து வரும் மழையால் உப்பளங்கள் தண்ணீரில் மூழ்கின. இதனால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது.

கடம்பூர் பகுதியில் 30 மி.மீ. மழை

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் மாவட்டத்தில் தூத்துக்குடி, கோவில்பட்டி, ஏரல், ஸ்ரீவைகுண்டம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. நேற்றும் மாவட்டத்தில் பல பகுதிகளில் மழை செய்து. ஏரல் பகுதியில் நேற்று மாலை 3.30 மணிக்கு தொடங்கிய மழை 4 மணி வரை பெய்தது. இதனால் ஏரல் பஜார் பகுதி, பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் குளம் போல் தேங்கியது. ஸ்ரீவைகுண்டம் பகுதியில் மதியம் சுமார் 20 நிமிடங்கள் மழை பெய்தது.
கடம்பூர் சுற்று வட்டார பகுதிகளில் சுமார் 2 மணி நேரம் மழை பெய்தது. இந்த பகுதியில் 30 மில்லிமீட்டர் மழை பதிவானது. அதே போல் தென்திருப்பேரை, திருச்செந்தூர் பகுதிகளில் காலை முதலே வானம் மேகமூட்டமாக காணப்பட்டது.

உப்பளங்கள் மூழ்கின

தூத்துக்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் தொடந்து சாரல் மழை விட்டுவிட்டு பெய்தது. இதனால் தூத்துக்குடியில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி கிடக்கிறது. அதே போன்று கடந்த 2 நாட்களாக தூத்துக்குடி அருகே உள்ள முத்தையாபுரம் பகுதியிலும் பலத்த மழை பெய்து வருகிறது. நேற்று மதியம் சுமார் 3 மணி அளவில் பலத்த மழை பெய்தது. இதனால் ரோடுகளில் மழைநீர் குளம்போல் தேங்கியது.

அங்கு உள்ள வாரச்சந்தையிலும் தண்ணீர் தேங்கியதால், சந்தையில் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. மேலும் அந்த பகுதிகளில் உள்ள உப்பளங்களிலும் மழைநீர் தேங்கியது. இதனால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது. மீண்டும் உற்பத்தி தொடங்க சில நாட்கள் ஆகலாம் என்று உப்பு உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர். கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால் அனல் காற்று வீசி வந்த தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் நேற்று காலை முதல் இதமான சூழ்நிலை காணப்பட்டது.






ஏரல் அருகேவீட்டின் மாடியில் பதுக்கிய வெடிகள் வெடித்து சிதறினமூதாட்டி படுகாயம்

ஏரல் அருகேவீட்டின் மாடியில் பதுக்கிய வெடிகள் வெடித்து சிதறினமூதாட்டி படுகாயம்
ஏரல் அருகே வீட்டின் மாடியில் பதுக்கிய வெடிகள் வெடித்து சிதறியதில், மூதாட்டி படுகாயம் அடைந்தார்.
ஏரல், 

ஏரல் அருகே வீட்டின் மாடியில் பதுக்கிய வெடிகள் வெடித்து சிதறியதில், மூதாட்டி படுகாயம் அடைந்தார்.

வெடிகள் வெடித்து சிதறின

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே கொற்கை மணலூர் நடுத்தெருவைச் சேர்ந்தவர் மந்திரம் (வயது 50). இவரது வீட்டின் மாடியில் உள்ள அறையில், அவருடைய உறவினர் ஒருவர் விழாக்களுக்கு பயன்படுத்தக்கூடிய வெடிகளை பதுக்கி வைத்து இருந்ததாக கூறப்படுகிறது.
நேற்று மந்திரம் தன்னுடைய குடும்பத்தினருடன் மேல ஆழ்வார்தோப்பு கோவிலுக்கு சென்றார். அப்போது மாலை 5.30 மணியளவில் மந்திரத்தின் வீட்டின் மாடியில் உள்ள அறையில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த வெடிகள் வெடித்து சிதறின. இதனால் மாடியில் உள்ள அறையின் ஒரு பக்க சுவர் இடிந்து விழுந்தது.

மூதாட்டி படுகாயம்

அந்த கட்டிட இடிபாடுகள், பக்கத்து வீடுகளிலும் விழுந்தன. இதில் 10 வீடுகள் சேதம் அடைந்தன. கட்டிட இடிபாடுகள் விழுந்ததில், பக்கத்து வீட்டைச் சேர்ந்த பிச்சிப்பூ அம்மாளின் (75) காலில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும், ஸ்ரீவைகுண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார், ஏரல் போலீஸ் இன்ஸ்பெக்டர் பட்டாணி, தாசில்தார் அற்புதமணி மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். வெடிவிபத்து நிகழ்ந்த இடத்தில் சிதறிய வெடி மருந்துகளை தடய அறிவியல் உதவி இயக்குனர் கலா லட்சுமி சேகரித்து ஆய்வுக்கு அனுப்பினார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.



சனி, 14 செப்டம்பர், 2019

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் பரவலாக மழை

மாவட்டம் முழுவதும் பரவலாக மழை:தூத்துக்குடிக்கு வந்த விமானம் தரை இறங்க முடியாமல் திரும்பியது
தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் பரவலாக நேற்று மழை பெய்தது. இதனால் தூத்துக்குடிக்கு வந்த விமானம் தரை இறங்க முடியாமல் மதுரைக்கு திரும்பியது.
தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் பரவலாக நேற்று மழை பெய்தது. இதனால் தூத்துக்குடிக்கு வந்த விமானம் தரை இறங்க முடியாமல் மதுரைக்கு திரும்பியது.

பலத்த மழை

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கடுமையான வெயில் மக்களை வாட்டி வதைத்து வந்தது. இதனால் மக்கள் மிகவும் சிரமப்பட்டு வந்தனர். இந்த நிலையில் நேற்று மதியம் திடீரென வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. மதியம் 2-30 மணியளவில் மழை பெய்ய தொடங்கியது. இந்த பலத்த மழை சுமார் ½ மணி நேரம் கொட்டித்தீர்த்தது. அதன்பிறகு தொடர்ந்து தூறிக் கொண்டே இருந்தது.
இந்தமழை காரணமாக தூத்துக்குடியில் முக்கிய சாலைகளில் மழைநீர் குளம் போல் தேங்கியது. இதனால் வாகனங்கள் ஊர்ந்து சென்றது. வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்பட்டனர்.

விமானம் திரும்பியது

சென்னையில் இருந்து தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையத்துக்கு நேற்று மதியம் 2-30 மணியளவில் தனியார் விமானம் வந்தது. அந்த விமானத்தில் 57 பயணிகள் இருந்தனர். அப்போது பலத்த மழை பெய்ததால் விமானம் தரை இறங்குவதில் சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து விமானம் தரையிறங்காமல் சிறிது நேரம் வட்டமடித்தது. பின்னர் விமானம் மதுரைக்கு திரும்பி சென்றது. மழை நின்ற பிறகு மீண்டும் விமானம் மதுரையில் இருந்து புறப்பட்டு மாலை 4-20 மணிக்கு தூத்துக்குடிக்கு வந்து சேர்ந்தது.

இதைத்தொடர்ந்து தூத்துக்குடியில் இருந்து சென்னை செல்ல தயாராக இருந்த 66 பயணிகளை ஏற்றிக்கொண்டு அந்த விமானம் மாலை 4-40 மணிக்கு புறப்பட்டு சென்றது.

பொதுமக்கள் மகிழ்ச்சி

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் நேற்று பரவலாக மழை பெய்தது. ஏரல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மதியம் 2.45 மணியளவில் பலத்த மழை பெய்தது. சுமார் அரை மணி நேரம் நீடித்த மழையால் சாலைகள், தெருக்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. ஏரல் பஜாரில் குளம் போன்று தண்ணீர் தேங்கியது. பின்னர் வடிகாலில் மழைநீர் வடிந்தது. நீண்ட நாட்களுக்கு பிறகு பெய்த பலத்த மழையால் விவசாயிகள், பொதுமக்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தனர்.

இதேபோன்று தென்திருப்பேரை, குரும்பூர், ஆழ்வார்திருநகரி, ஸ்ரீவைகுண்டம் பகுதிகளிலும் மதியம் சாரல் மழை சுமார் 45 நிமிடம் பெய்தது.

மழை அளவு

நேற்று மாலை 4 மணி நிலவரப்படி பெய்த மழை விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:-

காயல்பட்டினம் - 10

விளாத்திகுளம் - 21

காடல்குடி - 14

வைப்பார் - 22

சூரங்குடி - 2

கயத்தாறு - 2

கடம்பூர் - 10

கழுகுமலை - 17

ஓட்டப்பிடாரம் - 13

மணியாச்சி - 53

கீழஅரசடி - 1

ஸ்ரீவைகுண்டம் - 4.2

தூத்துக்குடி - 0.4

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...