ஸ்ரீவைகுண்டம் வடகால் வாய்க்காலில் 2 மாதங்களுக்கு மேல் தண்ணீர் வராததினால் ஏரலில் நெற்பயிர்கள் கருகியுள்ளது.
6 ஆயிரம் ஏக்கர் பயிர்கள் கருகின
ஸ்ரீவைகுண்டம் வடகால் வாய்க்காலில் தண்ணீர் நிறுத்தம்
ஏரல், ஜூலை 7:
ஸ்ரீவைகுண் டம் வடகால் வாய்க்காலில் 2 மாதத்திற்கு மேல் தொடர்ச்சியாக தண்ணீர் நிறுத்தப்பட்டதால் ஏரல், பேய்க்குளம் பகுதியில் சுமார் 6 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள நெல் மற்றும் வாழை பயிர்கள் கருகி வருகின்றன. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஏரல், சாயர்புரம் பகுதிகளில் முக்கிய தொழிலாக விவசாயம் உள்ளது. இப்பகுதிகளில் உள்ள ஆறுமுகமங்கலம், கொற்கை, அகரம், பழையகாயல், பேய்க்குளம் மற்றும் பெட்டைக்குளம், கோரம்பள்ளம் குளம் ஆகிய குளங்களுக்கு ஸ்ரீவைகுண் டம் வடகால் வாய்க்கால் மூலம் தண்ணீர் கொண்டு வரப்பட்டு நிரப்பப்படும்.
குளத்து பாசனம் மற்றும் ஸ்ரீவைகுண்டம் வடகால் வாய்க்கால் நேரடி பாசனம் மூலம் 12 ஆயிரத்து 800 ஏக்கர் நிலங்கள் பயனடைந்து வருகின்றன. தங்குதடையின்றி வடகால் வாய்க்காலில் தண்ணீர் எப்போதும் வந்ததால் இப்பகுதி நிலங்களில் இருபோக விளைச்சல் நடைபெற்று வந்தது.
தற்போது தொழிற்சாலைகளுக்கு தாமிரபரணி ஆற்றிலிருந்து குழாய் மூலம் தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்தால் ஸ்ரீவைகுண்டம் வடகால் வாய்க்காலில் தண்ணீர் முறையாக வருவதில்லை. மேலும் குளங்கள் தூர் வாரப்படாததாலும் அவற்றில் தண்ணீரை சேமித்து வைக்க முடிவதில்லை. இதனால் இப்பகுதியில் தற்போது ஒருபோக விளைச்சலுக்கே விவசாயிகள் திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது.
பெரும்பாலான விவசாயிகள் இருபோக விவ சாயத்தை கைவிட்ட நிலையில் ஏரல் பகுதியில் ஒரு சில விவசாயிகள் நெல் பயிரிட்டிருந்தனர். ஸ்ரீவைகுண்டம் வடகால் வாய்க்காலில் தொடர்ச்சியாக 2 மாதத்திற்கு மேல் தண்ணீர் வராததால் இதனை நம்பி பயிர் செய்துள்ள நெற்பயிர்கள் கருகி விட்டன. மேலும் எப்படியாவது நெற்பயிர்களை காப்பாற்ற வேண்டும் என்ற முயற்சியுடன் ஒரு சில விவசாயிகள் கழிவு நீரை விவசாய நிலத் தில் திருப்பிவிட்டுள்ளனர்.
வெற்றிலை மற்றும் வாழை பயிர்களுக்கு போர் அமைத்து ஆயில் இன்ஜின் மூலம் தண்ணீரை விவசாயிகள் பாய்ச்சி வருகின்றனர். இதனால் விவசாயிகளுக்கு இரட்டிப்பு செலவு ஆகிறது. மேலும் ஸ்ரீவைகுண்டம் வடகால் வாய்க்காலில் கடைசி குளமான பேய்க்குளம் வறண்டு காடாக காட்சி அளிக்கிறது. இதனால் இப்பகுதியில் லட்சக்கணக்கான வாழைகள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
கடந்த 2 மாதமாக வாய்க்காலில் தண்ணீர் வராததால் ஏரல், சாயர்புரம் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளது. இதனால் வீடுகளில் உள்ள போர்வெல் கிணறுகளில் தண்ணீர் இல்லாமல் வறண்டுள்ளது.
எனவே விவசாயிகளை காப்பாற்ற ஸ்ரீவைகுண்டம் வடகால் வாய்க்காலில் தண்ணீர் திறந்துவிட்டு கடைசி குளமான பேய்க்குளம் வரை நிரம்ப சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து விவசாயி ஒருவர் கூறுகையில், ஸ்ரீவைகுண்டம் வடகால் வாய்க்காலில் வரும் தண்ணீரை வைத்து நெல் நாற்று நடவு செய்தோம். ஆனால் தொடர்ச்சியாக 2 மாதங்களுக்கு மேல் தண்ணீர் வராததால் நெற்பயிர்கள் அனைத்தும் கருகிவிட்டன.
எனவே அரசு எங்கள் நிலங்களை பார்வையிட்டு கருகிய பயிர்களுக்கு இழப்பீடு தருவதுடன் மீண்டும் விவசாயம் செய்ய கடன் வசதி செய்து தர வேண்டும்� என்றார்.
விவசாயிகள் வேதனை
ஸ்ரீவைகுண்டம் வடகால் வாய்க்காலில் 2 மாதமாக தண்ணீர் திறந்து விடாததினால் ஏரலில் நெற்பயிரை காப்பாற்றிட விவசாயிகள் கழிவு நீரை பாய்ச்சி வருகின்றனர்.