செவ்வாய், 11 ஜூன், 2019

ஏரல்- மங்கலகுறிச்சி சாலையில் வடகால் வாய்க்கால் கரையோர பள்ளத்தால் விபத்து அபாயம்



ஏரல்,  ஜூன் 11:  ஏரல்- மங்களகுறிச்சி சாலையில் வடகால் வாய்க்கால் கரையோரம் பராமரிப்பின்றி உருவான ராட்சத பள்ளத்தால் விபத்து  அபாயம் நிலவுகிறது. ஏரலில்  இருந்து மங்கலகுறிச்சி செல்லும் சாலையில் வடிகால் மடை அருகே சாலையோரத்தில் வைகுண்டம் வடகால் வாய்க்காலில் மக்கள் குளிப்பதற்காக  அமைக்கப்பட்டுள்ள பாதையில் மண் அரிப்பு ஏற்பட்டதோடு சாலையோரத்தில் ராட்சத பள்ளமும்  உருவானது. இச்சாலையில் ஏரலில் இருந்து வைகுண்டம், நெல்லை, பெருங்குளம், பண்டாரவிளை, சாயர்புரம் வழியாக தூத்துக்குடிக்கும்  ஏராளமான அளவில் வாகனங்கள் சென்று வருகின்றன. மேலும் மங்கலகுறிச்சி, மேல மங்கலகுறிச்சி,  மங்களாபுரம், பெருங்குளம் உட்பட பகுதிகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட  மாணவ, மாணவிகள் ஏரல் பள்ளி மற்றும் மகளிர் பள்ளியில் படித்து வருகின்றனர்.  இவர்கள் அனைவரும் சைக்கிளில் இந்த சாலை வழியாகத்தான் சென்று வருகின்றனர். அத்துடன் இந்த சாலையோரங்களில் உள்ள விளை நிலங்களுக்கு விவசாயிகளும் விவசாய பணிகளுக்கு  சென்றுவர வேண்டியுள்ளது.

 இவ்வாறு போக்குவரத்திற்கு பஞ்சமில்லா இச்சாலையில் வடகால் வாய்க்கால் கரையோரம் பராமரிப்பின்றி உருவான ராட்சத பள்ளத்தால் விபத்து அபாயம் நிலவுகிறது. குறிப்பாக இச்சாலையில் செல்லும் வாகனஓட்டிகள் எதிரே வரும் கனரக வாகனங்களுக்கு  வழிவிடும்போது இந்த ராட்சத பள்ளத்தில் விழுந்து விபத்துக்கு உள்ளாகின்றனர். அத்துடன் சாலையோரத்தில் மின்விளக்கு வசதி இல்லாததால் இரவு இருண் மண்டுகிறது. அவ்வேளையில் இருசக்கர வாகனத்தில் வருபவர்கள் சாலையோரத்தில் இறங்கும்  போது இந்த ராட்சத பள்ளம் இருப்பது தெரியாமல் விழுந்து பலத்த காயமடைகின்றனர்.
 எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுவிஷயத்தில் இனியாவது தனிக்கவனம் செலுத்தி ராட்சத பள்ளத்தில் அதில் லாரிகளில் மணல் கொண்டு வந்து கொட்டி  சாலையோரத்தை அகலப்படுத்துவதுடன், அங்கு தடுப்புச் சுவர்  அல்லது தடுப்பு கம்பிகள் அமைக்க முன்வரவேண்டும். இதேபோல் இந்த சாலையில்  ஓரத்தில் கோட்டைகாடு விலக்கு அருகிலும் வயலுக்கு தண்ணீர் செல்லும்  வாய்க்கால் கரையோரத்திலும் உள்ள மெகா பள்ளம் ஏற்பட்டுள்ள இடத்திலும்  தடுப்பு கம்பிகள் அமைக்க வேண்டும். இதுவே வாகன ஓட்டிகள் உள்ளிட்ட அனைவரது எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...