
ஸ்ரீவைகுண்டம் அருகே வேன் மீது மோதிய மோட்டார் சைக்கிள் தீப்பிடித்து எரிந்தது. இதில் ஒரு மாணவர் உடல் கருகியும், மற்றொரு மாணவர் படுகாயம் அடைந்தும் உயிரிழந்தனர்.
தென்திருப்பேரை,
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள வீரபாண்டியன்பட்டினம் முத்துநகரை சேர்ந்தவர்கள் செந்தில் முருகன் மகன் சாமிநாதன் (வயது 18), வேம்பு மகன் அசோக் கணேஷ் (18). நண்பர்களான இருவரும் ஒரு கல்லூரியில் பி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வந்தனர். சாமிநாதன் நேற்று காலை தனது மற்றொரு நண்பரிடம் இருந்து மோட்டார்சைக்கிளை இரவல் வாங்கினார். அதில் அசோக் கணேசை ஏற்றிக் கொண்டு நெல்லையை நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது எதிரே நெல்லையை அடுத்த கங்கைகொண்டானில் இருந்து திருச்செந்தூர் நோக்கி ஒரு வேன் ஆட்களை ஏற்றிக் கொண்டு வந்து கொண்டிருந்தது.
காலை 9.30 மணிக்கு ஸ்ரீவைகுண்டம் அருகே புதுக்குடி பாலத்தை கடந்தபோது, வேன் மீது மோட்டார் சைக்கிள் பயங்கரமாக மோதியதாக கூறப்படுகிறது. இதில் மோட்டார்சைக்கிள் பல அடி தூரத்துக்கு தூக்கி வீசப்பட்டு தீப்பிடித்து எரிந்தது. இந்த கோர விபத்தில் சாமிநாதன் மீது தீப்பற்றியது. இதில் அவர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மற்றொரு இடத்தில் தூக்கி வீசப்பட்ட அசோக் கணேசும் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
விபத்து பற்றிய தகவல் அறிந்ததும் ஸ்ரீவைகுண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு சகாயஜோஸ் மற்றும் ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார்திருநகரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். ஸ்ரீவைகுண்டம் தீயணைப்பு படையினர் அங்கு விரைந்து சென்று மோட்டார் சைக்கிளில் பற்றி எரிந்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தனர். இறந்து கிடந்த 2 மாணவர்களின் உடல்களையும் போலீசார் மீட்டு பரிசோதனைக்காக ஸ்ரீவைகுண்டம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்கள். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விபத்தில் வேனின் முன்பகுதி லேசாக சேதம் அடைந்தது. சாமிநாதன் ஓட்டிச்சென்ற மோட்டார்சைக்கிள் கடந்த 3 நாட்களுக்கு முன்பு புதிதாக வாங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
வேன் மீது மோதிய மோட்டார் சைக்கிள் தீப்பிடித்து எரிந்த விபத்தில் கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலியான சம்பவம் அப்பகுதியிலும், அவரது உறவினர்கள் இடையேயும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த விபத்தால் திருச்செந்தூர்-நெல்லை சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக