திங்கள், 28 நவம்பர், 2011


ஏரல், நவ.28&
தாமிரபரணி வெள்ளத்தில் மூழ்கிய ஏரல் ஆற்றுப்பாலம் இடிந்துவிட்டதாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் தாமிரபரணி ஆற்றில் கடந்த 45 ஆண்டுக்கு முன் அதிகம் உயரமில்லாத பாலம் ஒன்று கட்டப்பட்டது. இதனால் ஆற்றில் வடபகுதியில் உள்ள ஏரல், சிறுத்தொண்டநல்லூர், வாழவல்லான், பெருங்குளம், நட்டாத்தி சாயர்புரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச்சேர்ந்தவர்களும், ஆற்றின் தென்பகுதியில் உள்ள குரும்பூர், குரங் கணி, தெந்திருப்பேரை, நாசரேத் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச்சேர்ந்தவர்களுக்கும் இந்த பாலம் பயனுள்ளதாக இருந்து வருகிறது. தினமும் ஏராளமான பஸ்கள் செல்கின்றன. ஏரல் வியாபார ஸ்தலம் என்பதால் தினமும் நூற்றுக்கணக்கானபேர் வந்துசெல்கிறார்கள்.
ஆனால் மழைகாலங்களில் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் போது இந்த பாலமும் மூழ்கிவிடும். தண்ணீர் வற்றிய பிறகுதான் மீண்டும் போக்குவரத்து தொடங்கும். இதனால் மழை காலங்களில் பள்ளி&கல்லூரிக்கு செல்பவர்கள், வியாபாரிகள், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். இவர்கள் இங்கு வரவேண்டும் என்றால் பல கிலோ மீட்டர் சுற்றி ஆத்தூர் பாலம் அல்லது திருவைகுண்டம் பாலம், ஆழ்வார்தோப்பு பாலம் ஆகியவற்றை சுற்றித்தான் வரவேண்டும்.
மழைகாலத்தில் தவறாமல் ஏரல் பாலம் மூழ்குவதால் பாலம் நாளுக்கு நாள் சேதமடைந்த வண்ணம் இருந்தது. அந்த பாலத்தை உயர்த்தி கட்டவேண்டும் என்று பொதுமக்கள் நீண்டகாலமாக போராடி வருகிறார்கள்.
தொகுதி எம்எல்ஏ சண்முகநாதன் ரூ.15 கோடியில் பாலம் அமைக்க ஏற்பாடு செய்யப்படும் என்று தெரிவித்தார். இந்த முயற்சியில் இறங்கிய நிலையில் அவரது மந்திரி பதவி பறிக்கப்பட்டது. பாலத்தில் இரு ஓரங்களிலும் உள்ள தடுப்பு தூண் களை காணவில்லை. பல இடங்களில் ஓட்டை விழுந்து விட் டது. தற்போது பெய்த மழை யால் பாலம் மூழ்கியது. இதனால் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இன்று காலை சிறிதளவு தண்ணீர் குறைந்துள்ளதே தவிர பாலம் மூழ்கிய நிலையில் தான் உள்ளது. இதனால் இன்றும் போக்குவரத்து நடைபெறவில்லை. பாலத்தை சுற்றி அமலைச்செடிகளாக காட்சியளிக்கின்றன.
இதற்கிடையில் இன்று பாலத்தின் ஒரு பகுதி உடைந்துவிட்டதாக செய்தி பரவியது. இதைத்தொடர்ந்து காலையில் ஏராளமான மக்கள் அங்கு திரண்டு வந்தனர். தற்போது பாலம் மூழ்கி இருப்பதால் உடைப்பு உள்ளதா என கண்டுபிடிக்கமுடியவில்லை. தண்ணீர் வற்றினால்தான் அதுபற்றி தெரியவரும். எது எப்படியோ இனியும் காலம் தாழ்த்தாது பாலத்தை உயர்த்தி கட்டவேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கை.
ஆற்றில் இறங்கிய பேரூராட்சி தலைவர்
ஏரல் ஆற்றுப்பாலத்தில் வெள்ளம் ஓடுவதால் அமலைச்செடிகள் பாலத்தை முழுவதும் ஆக்கிரமித்துள்ளன. இதனால் தண்ணீர் பாலத்தில் உள்ள குழாய் வழியாக செல்லமுடியாதநிலை உள்ளது. இதைத்தொடர்ந்து இன்று காலை ஏரல் பேரூராட்சி தலைவர் பாலகிருஷ்ணன் அமலைச்செடிகளை அகற்றும் பணியில் அவரே நேரடியாக களத்தில் இறங்கினார். பாலத்தின் மீது தண்ணீர் ஓடியபோதிலும் துணிச்சலாக அவர் பாலத்தில் இறங்கி அமலைச்செடிகளை அகற்றினார்.
அவருடன் கவுன்சிலர் மணிவண்ணன், மாநில வியாபாரிகள் நலச்சங்க தலைவர் சாந்தகுமார், மற்றும் நவுஷாத், மைக்கேல், சேகர், ராஜேஷ், ஜேசுராஜ், ஏட்டு நாராயணசாமி ஆகியோரும் ஈடுபட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...