
“ஆளுங்கட்சியினர் சொல்வதையே தேர்தல் ஆணையம் செய்கிறது” என்று கனிமொழி எம்.பி. குற்றம் சாட்டினார்.
தூத்துக்குடி,
“ஆளுங்கட்சியினர் சொல்வதையே தேர்தல் ஆணையம் செய்கிறது” என்று கனிமொழி எம்.பி. குற்றம் சாட்டினார்.
கனிமொழி பார்வையிட்டார்
தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் கனிமொழி எம்.பி. நேற்று காலையில் தூத்துக்குடி செயின்ட் மேரிஸ் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடி மையத்தை பார்வையிட்டார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
நெருக்கடி
தமிழகத்தில் மதசார்பற்ற கூட்டணி வேட்பாளர்கள் அனைவருக்கும் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. ஆனால் தூத்துக்குடியில் தமிழிசை சவுந்தரராஜன், அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆகியோரால் முடுக்கிவிடப்பட்ட காவல்துறையினர் தி.மு.க.வினருக்கு பல நெருக்கடிகளை கொடுத்து வருகிறார்கள். ஆனால் அதையும் தாண்டி அவர்கள் சிறப்பாக பணியாற்றி கொண்டு இருக்கிறார்கள். தேர்தல் ஆணையம் தொடர்ந்து ஆளுங்கட்சியினர் சொல்வதையே செய்து வருகிறது. வயதானவர்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் தேர்தல் ஆணையம் இன்னும் சற்று கூடுதலாக சரியாக வசதிகளை செய்து கொடுத்து இருக்கலாம்.
வளர்ந்த நாடுகளும் தற்போது காகித முறை மூலம் ஓட்டுப்பதிவு செய்யும் நடைமுறைக்கு வந்து விட்டன. ஆனால் பா.ஜனதா அரசு வாக்குப்பதிவு எந்திரத்தை பயன்படுத்த வேண்டும் என பிடிவாதமாக இருப்பது மக்களுக்கு அச்சத்தையும், நம்பிக்கையின்மையையும் தருகிறது. ஜனநாயகம் என்பது சந்தேகங்களுக்கு இடம் கொடுக்காத வகையில் இருக்க வேண்டும். வாக்குப்பதிவு எந்திரங்கள் அடிக்கடி பழுதாவதால், மீண்டும் காகித முறை வாக்குப்பதிவு மேற்கொள்ள வேண்டும் என்பது அனைவரின் கருத்தாக இருக்கிறது.
கூடுதல் நேரம்
தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்குப்பதிவு எந்திரம் பழுது காரணமாக குறிப்பிட்ட நேரத்தில் வாக்குப்பதிவு தொடங்காத மையங்களில் கூடுதல் நேரம் வாக்காளர்கள் வாக்களிக்க ஒதுக்க வேண்டும் என்று கேட்டு உள்ளோம். மக்கள் ஆர்வமாக வாக்களித்து வருகிறார்கள். மத்தியில் இருக்கும் ஆட்சியை மாற்ற வேண்டும், மாநில ஆட்சியை மாற்ற வேண்டும் என்பதில் மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். மக்கள் மாற்றம் வேண்டும் என்று நினைக்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது தூத்துக்குடி வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ., பொதுக்குழு உறுப்பினர் ஜெகன், மாநகர செயலாளர் ஆனந்தசேகரன் உள்ளிட்டவர்கள் உடன் இருந்தனர். பின்னர் கனிமொழி விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வாக்குச்சாவடியை பார்வையிட்டார்.
இதற்கிடையே, தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. தேர்தல் முகவர் அன்புநிதி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் சந்தீப் நந்தூரியிடம் ஒரு மனு கொடுத்தார். அதில், “தூத்துக்குடி தொகுதியில் மொத்தம் 22 இடங்களில் எந்திர கோளாறு காரணமாக தேர்தல் தாமதமாக தொடங்கி உள்ளது. அந்த வாக்குச்சாவடிகளில் கூடுதல் நேரம் அளிக்க வேண்டும்“ என்று தெரிவித்து இருந்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக