வியாழன், 8 நவம்பர், 2012

ஏரல் பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிக்கை

ஏரலில் ஆக்கிரமிப்புகளை அகற்றி பஸ்நிலையத்தை நவீனப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஏரலில் உள்ள மகாத்மா காந்தி பஸ் நிலையத்தை சுற்றுவட்டாரத்திலுள்ள 30-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள்.
 நாள்தோறும் சென்னை, மதுரை உள்பட 40-க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் இயக்கப்படும் அரசு மற்றும் தனியார் பஸ்களும், ஏரல் சேர்மன் சுவாமி கோவில், குரங்கணி கோவில்,ஆறுமுகமங்கலம் கோவில், வனத்திருப்பதி, நவதிருப்பதி கோவில்கள் மற்றும் நாலுமாவடி தேவாலயங்கள் உள்ளிட்ட இடங்களுக்குச் செல்லும் சிறப்பு பஸ்களும் இங்கு வந்து செல்கின்றன. இது தொடர்பாக ஏரல் நகர காங்கிரஸ் தலைவர் பாக்கர்அலி நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்களிடம் கையெழுத்து வாங்கி மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது,
 ஏரல் பஸ் நிலையத்தில் பயணிகளுக்காக ஒதுக்கப்பட்ட இடங்களை வியாபாரிகள் ஆக்கிரமித்துள்ளனர். மழைக் காலங்களில் சாக்கடை நீரும் புகுந்து, தண்ணீர் தேங்குகிறது.
 மேலும், பஸ் நிலைய வளாகத்துக்குள் 50-க்கும் மேற்பட்ட தனியார் வாடகைக் கார்கள் பஸ்களுக்கு இடையூறாக நிறுத்தப்படுகின்றன. 
 மேலும், பேரூராட்சி சார்பில் பஸ் நுழைவுக் கட்டணம் பல ஆண்டுகளாக வசூலிக்கப்படாததால், ஆண்டுக்கு ரூ. 1 லட்சத்து 46 ஆயிரம் வீதம் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது.
 எனவே ஆக்கிரமிப்புகளை அகற்றி, பஸ் நிலையத்தை நவீனப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
 இதுகுறித்து ஏரல் பேரூராட்சித் தலைவர் பாலகிருஷ்ணன் கூறியதாவது, ஏரல் தேர்வு நிலை பேரூராட்சிக்கு உள்பட்ட மகாத்மா காந்தி பஸ் நிலையத்துக்கு வந்து செல்லும் அரசு மற்றும் தனியார் பஸ்களிடம் நுழைவுக் கட்டணம் வசூலிக்கவும், ஆக்கிரமிப்புகளை அகற்றவும், பஸ் நிலைய வளாகத்துக்குள் வாடகைக் கார்களை நிறுத்தக் கூடாது என டிஜிட்டல் போர்டு மூலம் தெரியப்படுத்தவும் பேரூராட்சி சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
 மேலும், பஸ் நிலையத்துக்குள் நவீன சுகாதார வளாகம் அமைத்து, வணிக வளாகத்தைப் புதுப்பித்துக் கட்டவும் மன்றத்தால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்றார் அவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...