ஞாயிறு, 16 அக்டோபர், 2016

ஆதிச்சநல்லூர் புகழ் பாடிய பெருமக்கள்

16,2016, 9:53 AM IST
‘இந்தியாவிலேயே முதன் முதலாகத் தொல்பொருள் ஆய்வு நடத்தப்பட்ட இடம் ஆதிச்சநல்லூர் என்பதில் இருந்தே அந்த இடத்தின் முக்கியத்துவத்தை அறிந்து கொள்ளலாம்.

114 ஆண்டுகளுக்கு முன் அங்கே விரிவான முறையில் ஆய்வை மேற்கொண்ட ஆங்கிலேயரான அலெக்சாண்டர் ரியா, ஆதிச்சநல்லூர் போலவே தாமிரபரணி ஆற்றங்கரை நெடுகிலும் பழங்கால தமிழர்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் மேலும் பல இடங்களில் புதையுண்டு கிடக்கின்றன என்பதையும் கண்டுபிடித்தார்.

ஆதிகால மக்கள் வாழ்ந்த இடம் தாமிரபரணி ஆற்றங்கரையே என்பதை அறிந்த அவர் அங்கே மொத்தம் 37 இடங்களில் தொல்பொருள் ஆய்வு நடத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியதோடு, அந்த இடங்களில் எல்லாம் சிறிய அளவில் ஆய்வுகளையும் மேற்கொண்டார்.

அதாவது, தாமிரபரணி ஆற்றங்கரை ஓரம் உள்ள 1) ராஜவல்லி பரம்பு, 2) பாலாமடை, 3) மணப்படை வீடு, 4) கீழநத்தம், 5) பாளையங்கோட்டை, 6) கிருஷ்ணாபுரம் பரம்பு, 7) வடக்கு வல்லநாடு, 8) வல்லநாடு, 9) அகரம், 10) முறப்பநாடு, 11) வசவப்பபுரம், 12) அனவரதநல்லூர், 13) விட்டிலாபுரம், 14) கொங்கராயகுறிச்சி, 15) கருங்குளம், 16) ஆதிச்சநல்லூர், 17) ஸ்ரீவைகுண்டம், 18) திருப்புளியங்குடி, 19) புதுக்குடி, 20) வெள்ளூர், 21) கால்வாய், 22) மளவராயநத்தம், 23) ஆழ்வார்திருநகரி, 24) அழகிய மணவாளபுரம் - செம்பூர், 25) திருக்கோளூர், 26) அப்பன் கோவில், 27) தென்திருப்பேரை, 28) புறையூர், 29) அங்கமங்கலம், 30) குரும்பூர், 31) நாலுமாவடி, 32) நல்லூர், 33) சுகந்தலை, 34) கொற்கை, 35) மாறமங்கலம், 36) காயல்பட்டணம், 37) வீரபாண்டியன்பட்டணம் ஆகிய இடங்களை அலெக்சாண்டர் ரியா கண்டறிந்து அங்கே அகழ்வாய்வுகளை நடத்தினார்.

இந்த இடங்களில் எல்லாம், ஆதிகாலத் தமிழர்கள் சிறிய கிராமங்கள் என்ற அளவில் வாழ்ந்து இருக்கலாம் என்றும், ஆதிச்சநல்லூர் மற்றும் கொற்கை ஆகிய இடங்களில் மட்டுமே மிகப் பெரிய வணிகப் பயன்பாட்டுடன் மக்கள் அதிக அளவில் - பெரிய நகர் போல அமைத்து வாழ்ந்து இருக்க வேண்டும் என்பதும் அவரது ஆய்வுகளில் இருந்து தெரிய வந்தது.

ஆனால் கடந்த 100 ஆண்டுகளாக அங்கு பெரிய அளவில் ஆய்வுகள் ஏதும் மேற்கொள்ளப்படவில்லை.

2004-ம் ஆண்டு தாமிரபரணி ஆற்றங்கரையில் மீண்டும் ஆய்வு நடத்திய இந்திய தொல்பொருள் ஆய்வுக் குழுவினர், அலெக்சாண்டர் ரியா வரைந்த ஒரு வழிகாட்டி வரைபடத்தினை வைத்துக்கொண்டு எங்கெல்லாம் முதுமக்கள் தாழிகள் உள்ளன என கண்டுபிடித்தனர். அவர் எழுதி இருந்த குறிப்புப்படி, நாட்டார்குளம் என்னும் இடத்தில் முதுமக்கள் தாழி இருப்பதை அறிந்தனர். ஆனால் அங்கு ஆய்வு நடத்துவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே அங்கு உள்ள இடங் களுக்கு மேலே மக்கள் வீடுகளைக் கட்டி குடியேறி விட்டனர். அரசு சமுதாய நலக்கூடத்தினைக்கூட இந்த பகுதியிலேயே கட்டி உள்ளனர்.

இதனால் அங்கு மேற்கொண்டு ஆய்வு நடத்த இயலாமல் போய்விட்டது.

இங்கு வீடு கட்டும் போது முதுமக்கள் தாழிகள் வெளிப்பட்டன என்று நெல்லையின் முதுபெரும் எழுத்தாளர் ஆர்.எஸ்.ஜேக்கப் தனது பயண நூலில் குறிப்பிட்டுள்ளார்.

இதுபோல மேலும் பல இடங்கள் முழுவதுமாக ஆய்வுக்கு உட்படுத்தப்படவில்லை என்றபோதிலும், ஆய்வு மேற்கொண்ட ஒரு சில இடங்களில் மட்டும் தாமிரபரணி ஆற்றங்கரை நாகரிகம் பற்றி ஓரளவுக்குத் தெரிய வந்து இருக்கிறது.

இந்தியாவிலும் சரி, உலகின் மற்ற பகுதிகளிலும் சரி, ஒரே ஆற்றங்கரை பகுதியில் இந்த அளவுக்கு அதிகமான இடங்களில் தொல்பொருள் ஆய்வு நடத்தப்பட்டது இல்லை என்ற பெருமை தாமிரபரணி ஆற்றங்கரை நாகரிகத்துக்கு உண்டு.

ஆனால், இவ்வளவு பாரம்பரியம் மிக்க நாகரிக வரலாறு, உலக அரங்கில் அதிகமாக எடுத்துச் சொல்லப்படாமலேயே இருக்கிறது என்பதோடு, உள்ளூரிலேயே பலரும் தெரிந்து கொள்ளாமல் இருட்டறையில் அடைந்து கிடக்கிறது என்பது தான் வேதனை.

உலகின் மற்ற பகுதிகளில் நடைபெற்ற தொல்பொருள் ஆய்வுகள் குறித்தும், அங்கே வாழ்ந்த மக்களின் நாகரிகம் பற்றியும் விரிவான தகவல்கள் அடங்கிய பல நூல்கள் வெளியாகி இருக்கின்றன.

ஆனால், அவற்றுக்கெல்லாம் முந்திய நாகரிகமான தாமிரபரணி ஆற்றங்கரை தமிழர்களின் நாகரிக வரலாறு பற்றி எழுதப்பட்ட நூல்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்.

தாமிரபரணி ஆற்றங்கரை நாகரிகம் பற்றி முதன் முதலாக ஓர் ஆவணத்தைப் பதிவு செய்தது, அங்கே ஆய்வு நடத்திய அலெக்சாண்டர் ரியா தான்.

அங்கு அவர் நடத்திய ஆய்வுகளின்போது கிடைத்த ஏராளமான பொருட்கள் அனைத்தையும் வரிசைப்படுத்தி அவை பற்றிய தெளிவான குறிப்புகளை நீண்ட பட்டியலாக வெளியிட்டார். அந்தப் பட்டியல் தான் ஆதிச்சநல்லூர் நாகரிக வரலாற்று தகவல் அடங்கிய முதல் புத்தகம் ஆகும்.

சிந்துசமவெளியில் தொல்பொருள் ஆய்வு நடத்திய ஆர்.டி.பானர்ஜி மற்றும் ஜான் மார்ஷல், மார்ட்டிமர் வீலர், எம்.எஸ்.மெக்கே வாட்ஸ், டாக்டர் சி. மக்ளன், பேராசிரியர் ஜி. எலியட் சுமித், பேராசிரியர் எஸ். ஜக்கர் மேன், அறிஞர் கில்பர்ட் சிலேட்டர் போன்ற அறிஞர்களும் தாங்கள் எழுதிய ஆய்வுக்கட்டுரைகளில் ஆதிச்சநல்லூர் நாகரிகத்தை சுட்டிக்காட்டி இருக்கிறார்கள்.

ஆனால், அதன் பிறகு வெகுகாலமாக ஆதிச்சநல்லூர் நாகரிகம் பற்றி, தமிழர்கள் உள்பட யாரும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.

சாத்தான்குளத்தைச் சேர்ந்த அறிஞர் அ.ராகவன், 40 ஆண்டுகளுக்கு முன்பு, ஆதிச்சநல்லூர் நாகரிக வரலாற்றை ஆவணப்படுத்த வேண்டும் என்ற நல்ல நோக்கத்துடன், பெரும் முயற்சி செய்து பல ஆதாரங்களையும் தேடிப்பிடித்து, 1978-ம் ஆண்டில், ‘ஆதித்தநல்லூரும் பொருநைவெளி நாகரிகமும்’ என்ற நூலை வெளியிட்டார்.

ஆதிச்சநல்லூர் நாகரிகத்தின் பெருமை பேசும் முதல் தமிழ்ப் புத்தகமாக அது வெளிவந்தது என்று சொன்னால் மிகை அல்ல.

அதன் பிறகு ஒரு சிலர், தாங்கள் எழுதிய தமிழர்களின் வரலாறு தொடர்பான நூல்களில் ஆதிச்சநல்லூர் குறித்து ஆங்காங்கே ஒரு சில தகவல்களை மட்டும் குறிப்பிட்டார்கள்.

தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றத்தின் முன்னாள் துணைத்தலைவரும், அழகப்பா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தருமான முனைவர் அ.ராமசாமி, 2013-ம் ஆண்டு எழுதிய ‘தொன்மைத் தமிழர் நாகரிக வரலாறு’ என்ற நூலில் ஆதிச்சநல்லூர் நாகரிகம் தொடர்பான பல அரிய தகவல்களைத் தெரிவித்து இருக்கிறார்.

திருநெல்வேலி மாவட்டம் உடையார்பட்டியைச் சேர்ந்த அறிஞர் அ. அருணாசலம், ‘தண்பொருநை நாகரிகம்’ என்ற தலைப்பில் எழுதிய நூலிலும் தாமிரபரணி ஆற்றங்கரை நாகரிகம் மற்றும் ஆதிச்சநல்லூர் குறித்து பல செய்திகள் சொல்லப்பட்டுள்ளன.

ஆன்மிக எழுத்தாளர்- வரலாற்று ஆசிரியர் என்று பன்முக அடையாளம் கொண்ட முத்தாலங்குறிச்சி காமராசு, ‘ஆதிச்சநல்லூர் ஆய்வுகள்’ என்ற அருமையான நூலை எழுதி இருக்கிறார். வருங்கால சமுதாயத்துக்கு ஆதிச்சநல்லூர் நாகரிக வரலாறு சென்று போய்ச் சேர வேண்டும் என்ற தணியாத ஆர்வத்தில் அந்த நூல் எழுதப்பட்டு இருக்கிறது.

தாமிரபரணி ஆற்றங்கரையில் பிறந்த இவர், ஆதிச்சநல்லூர் பற்றி யார் அறிந்துகொள்ள விரும்பினாலும் அவர்களை அங்கே அழைத்துச் சென்று விலாவாரியாக விளக்கிச் சொல்வதில் சளைப்பதே இல்லை.

பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் மற்றும் கணியன் பாலன் உள்பட சில எழுத்தாளர்களும், தொல்பொருள் ஆய்வாளர் எஸ்.ராமச்சந்திரன் உள்பட சிலரும், ஆதிச்சநல்லூர் நாகரிகம் பற்றி கட்டுரை எழுதி இருக்கிறார்கள்.

நெல்லை கலெக்டராக இருந்த ஆஷிஸ்குமார் ஆதிச்சநல்லூர் நாகரிகம் பற்றி அறிந்து வியந்தார். அந்த நாகரிக வரலாறு என்றென்றும் போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் ஆதிச்சநல்லூர் பகுதியிலேயே ஓர் அருங்காட்சியகம் கட்ட ஏற்பாடு செய்தார்.

அதுபோல அங்கு கலெக்டராக பணியாற்றிய ரவிக்குமார், ஆதிச்சநல்லூர் ஆய்வின்போது எடுத்த புகைப்படங்கள் மற்றும் முதுமக்கள் தாழிகளின் மாதிரிகளைச் செய்து வைத்து அந்த அருங்காட்சியகத்தை மேம்படுத்த முயற்சி செய்தார். ஆனால் அவரது எண்ணம் நிறைவேறவில்லை.

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தமிழ்த்துறை முன்னாள் தலைவர் தொ.பரமசிவனுக்கு ஆதிச்சநல்லூர் மீது அதிக பற்று உண்டு. அவர் ஆதிச்சநல்லூர் குறித்து விரிவான ஆய்வுகள் செய்துள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் தனது ‘மருதநாயகம்’ படப்பிடிப்பை இங்கே வைத்துக் கொள்ளலாம் என ‘லொக்கேஷன்’ பார்த்து விட்டுச்சென்றார் என்றும் ஒரு தகவல் உண்டு. ஒருவேளை இதுபோன்ற சினிமா படப்பிடிப்புகள் அங்கே நடந்தால் ஆதிச்சநல்லூர் பெருமை குறித்து வெளிஉலகிற்கு தெரிய அதிக வாய்ப்பு உண்டு.

கருங்குளம் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் மறைந்த புளியங்குளம் ஆர்.கே.ஆர். ராஜா ஆதிச்சநல்லூர் நாகரிக வரலாற்றுத் தொன்மையை வெளிக்கொணர பெரும் முயற்சி செய்தார்.

ஆதிச்சநல்லூர் பற்றிக் கேள்விப்பட்டு அதனைக் காண வரும் மக்களுக்கு ஆடு மேய்த்துக்கொண்டே இலவச வழிகாட்டியாக இருந்தவர் ஆதிச்சநல்லூரை சேர்ந்த சிதம்பர தேவர். இவர் ஆதிச்சநல்லூரின் புகழை வெளிக்கொண்டு வரவேண்டும் என்று உள்ளூர் அதிகாரி முதல் நாட்டின் ஜனாதிபதி வரை பலருக்கும் சளைக்காமல் மனுக்களை தொடர்ந்து எழுதி வந்தவர்.

ஆர்.கே.ஆர். ராஜா மற்றும் சிதம்பர தேவர் ஆகிய இரு வரும் தற்போது உயிரோடு இல்லை.

இது போல ஒரு சில அறிஞர்களே ஆதிச்சநல்லூர் நாகரிக வரலாற்றை ஆவணப்படுத்த பெரும் முயற்சி எடுத்து இருக்கிறார்கள்.

ஆதிச்சநல்லூர் ஆய்வுகள் தொடர்பாக ஆங்காங்கே பல கருத்தரங்கங்களும் நடத்தப்பட்டு இருக்கின்றன. பெரியார் ஈ.வே. ராமசாமி - நாகம்மை கல்வி ஆராய்ச்சி அறக்கட்டளை தலைவர் வே.ஆனைமுத்து நடத்திய, ‘ஆதிச்சநல்லூர்ச் சிறப்பும் எதிர்காலத் திட்டங்களும்’ என்ற கருத்தரங்கு இதில் குறிப்பிடத்தக்கது.

மேலும் பல அறிஞர்களும் பல்வேறு காலகட்டங்களில் ஆதிச்சநல்லூர் நாகரிக வரலாறு தொடர்பாக கருத்தரங்குகளை நடத்தி, ஆய்வுக்கட்டுரைகளையும் சமர்ப்பித்து இருக்கிறார்கள்.

இணையதளத்திலும் இது தொடர்பான பல கட்டுரைகளைக் காணமுடிகிறது. பலர் தங்கள் முகநூல் பக்கத்தில், ஆதிச்சநல்லூர் நாகரிக வரலாற்றைக் கொண்டாடி இருக்கிறார்கள்.

புத்தகங்களை வெளியிட்டது - மிகக்குறைந்த எண்ணிக்கையில் அவை விற்பனை ஆனது- சிறிய அறைக்குள் அமர்ந்து ஒரு சிலரின் கைத்தட்டல்களுக்கு இடையே கருத்தரங்குகளை நடத்தியது - விரல் விட்டு எண்ணக்கூடியவர்கள் மட்டுமே படிக்கக்கூடிய ஆய்வுக்கட்டுரைகளை வெளியிட்டது - இணையதளத்தில் தேடுவதற்கு எத்தனையோ விஷயங்கள் இருக்கும் நிலையில், ஆதிச்சநல்லூர் பற்றி அறிந்து கொள்ள, அது தொடர்பான முகநூல் பக்கங்களைப் பார்ப்பது சொற்பமே... என்பவை போன்றவற்றால், அறிஞர்கள் பலர் அதி தீவிர முயற்சிகளை மேற்கொண்டாலும், ஆதிச்சநல்லூர் பற்றியும், தாமிரபரணி நாகரிக வரலாறு குறித்தும் இன்றைய இளைஞர் சமுதாயத்தினர் பெரும்பாலானவர்கள் ஒன்றும் அறியாதவர்களாகவே இருக்கிறார்கள்.

இந்த அவல நிலைக்குக் காரணம் என்ன? இந்த நிலைமை மாறி, ஆதிச்சநல்லூர் நாகரிக வரலாறு என்றென்றும் போற்றப்பட என்ன செய்ய வேண்டும் என்பதை அடுத்த வாரம் பார்க்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...