வியாழன், 5 ஜூலை, 2012

ஏரல் தாமிரபரணி ஆற்றில் ரூ.14.60 கோடி மதிப்பில் உயர்மட்ட பாலம்

ஏரல் : ஏரல் பகுதி மக்களின் நீண்டகால கோரிக்கைக்கு பலன் கிடைத்த வகையில் ஏரல் தாமிரபரணி ஆற்றில் 14 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பில் உயர்மட்ட பாலத்திற்கான பணிகள் நேற்று பூமிபூஜையுடன் துவங்கப்பட்டது. இதனால் ஏரல் மற்றும் சுற்று வட்டார கிராம மக்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் மூன்றாவது பெரிய வியாபார ஸ்தலமான ஏரலில் ஆற்றுப்பாலம் தரைமட்ட பாலமாக அமைந்திருந்ததால் ஒவ்வொரு ஆண்டும் மழைக் காலத்தின் போது பொது மக்கள் கடும் சிரமத்தை அனுபவித்து வந்தனர். மழைக் காலத்தில் வெள்ளத்தின் போது ஆற்றுப்பாலம் நீரில் மூழ்கி போக்குவரத்து தடைபட்டு சிரமம் ஏற்பட்டு வந்தது. இந்த பாலத்தை உயர்மட்ட பாலமாக கட்டுவதற்கு நீண்ட காலமாக பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர். தொடர் கோரிக்கைக்கு பலன் கிடைத்த வகையில் இப்பாலத்திற்கு தமிழக அரசு 14 கோடியே 60 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. நேற்று பூமி பூஜையுடன் உயர்மட்ட பாலத்திற்கான பணிகள் துவங்கப்பட்டது. நேற்று நடந்த விழாவில் ஸ்ரீவை.,தொகுதி எம்எல்ஏ.,சண்முகநாதன் கலந்து கொண்டு பூமிபூஜை மூலம் பாலத்தின் பணிகளை துவக்கி வைத்தார். விழாவில் அவர் பேசியதாவது, ஏரலில் உயர்மட்ட பாலம் கட்ட வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து முயற்சி செய்து வந்தனர். இந்நிலையில் தற்போது தமிழக அரசு உயர்மட்ட பாலம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்து இன்று முதல் பணி துவங்கப்படுகிறது. தமிழகத்தில் பெரிய பெரிய திட்டங்களை நிறைவேற்றி வரும் முதல்வர் ஏரலுக்கு முக்கியத்துவம் கொடுத்து நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். கடந்த எட்டு மாதங்களாக இந்த பாலத்திற்காக சர்வே செய்யப்பட்டு வில்லங்கம் பார்த்து அடிப்படை வேலைகளை முடித்து தற்போது பெரிய திட்டம் துவங்கப்படுகிறது. மேலும் ஏரல் நகருக்கு பைபாஸ் ரோடு தேவை என்ற கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அதற்கு நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும். ஏரல் மற்றும் சுற்று வட்டார கிராம மக்களுக்கு என்ன தேவை என்று அறிந்து செயல்பட்டு வருகிறேன். எனக்கு ஓட்டு போட்டு ஜெயிக்க வைத்த மக்களுக்கு எப்பொழுதும் நன்றியோடு செயல்படுவேன் இவ்வாறு அவர் பேசினார். நீண்ட காலமாக பொதுமக்கள் எதிர்பார்த்த உயர்மட்ட பாலத்திற்கான பணிகள் நேற்று துவங்கப்பட்டதால் ஏரல், சுற்று வட்டார கிராம மக்கள், வியாபாரிகள், மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பூமி பூஜை விழாவில் முன்னாள் எம்எல்ஏ.,செல்லத்துரை, ஸ்ரீவை.,ஒன்றிய செயலாளர் ஆறுமுகநயினார், திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன், கருங்குளம் ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியன், பெருங்குளம் ஒன்றிய செயலாளர் செல்லத்துரை, சிவத்தையாபுரம் குணசேகரன், ஏரல் நகர அதிமுக.,வினர், ஏரல் நகர காங்.,தலைவர் பாக்கர்அலி, வியாபாரிகள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஆத்திப்பழம் நன்றி கூறினார். ஏற்பாடுகளை ஏரல் நகர அதிமுக.,செயலாளர் ஆத்திப்பழம் செய்திருந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...