வியாழன், 27 செப்டம்பர், 2012

நிலத்தடி நீரை தொழிற்சாலைகளுக்கு விற்பதை தடுத்து நிறுத்த கோரி ஏரலில் சாலை மறியல்


ஏரல்: ஸ்ரீவைகுண்டம் தாலுகா பகுதியில் இருந்து நிலத்தடிநீர் உறிஞ்சப்பட்டு தொழிற்சாலைகளுக்கு விற்கப்படுவதை உடனடியாக தடுத்து நிறுத்த வலியுறுத்தி ஏரலில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. ஸ்ரீவைகுண்டம் வட்டத்தில் ஏரல், உமரிக்காடு, வாழவல்லான், சிறுத்தொண்டநல்லூர் பகுதிகளில் நிலத்தடி நீர் முற்றிலும் குறைந்து விட்டது. வீடுகளில் உள்ள போர்களில் தண்ணீர் இல்லாமல் தண்ணீருக்காக பொதுமக்கள் தெரு தெருவாய் அலையும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஏரல், வாழவல்லான், உமரிக்காடு, பெருங்குளம், மங்களக்குறிச்சி இரட்டை திருப்பதி ஆகிய பகுதிகளில் தினமும் ஆயிரக்கணக்கான லாரிகளில் நிலத்தடி நீர் உறிஞ்சப்பட்டு தொழிற்சாலைகளுக்கு விற்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே இப்பகுதியில் நிலத்தடி நீர் வற்றி விவசாயம் மற்றும் அன்றாட தேவைக்கு தண்ணீர் இல்லாத நிலையில் தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படுவது பொதுமக்கள் இடையே கடுமையான கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து பல்வேறு தரப்பிலும் அரசுக்கு புகார் மனு அனுப்பியும் பல்வேறு போராட்டங்களை விவசாயிகள் நடத்தியும் இதுவரை தண்ணீர் கொண்டு செல்லப்படுவது முற்றிலும் தடை செய்யப்படவில்லை. இதனால் சாலைமறியல் போராட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டு அதன்படி தூத்துக்குடி மாவட்ட தாமிரபரணி நதிநீர் பாதுகாப்பு பேரவை அமைப்பாளர் நயினார் குலசேகரன் தலைமையில் ஏரல் காந்திசிலை முன்பு மறியல் போராட்டம் நடந்தது. போராட்டத்தில் தாமிபரணி பாதுகாப்பு இயக்கத் தலைவர் ஜோசப் கென்னடி, தூத்துக்குடி மாவட்ட மனித உரிமைகள் கழக தலைவர் கார்த்திகேயன் வழக்கறிஞர்கள் திலகவதி, விஜி, ஏரல் வியாபாரிகள் சங்க பொ ருளாளர் வில்சன். வெள்ளையா, செயலாளர் மந்திரபிரகாஷ், ஏரல் நகர காங்.,தலைவர் பாக்கர்அலி, தூத்துக்குடி மேற்கு மாவட்ட மனித உரிமைகள் கழகத் தலைவர் அமர்சிங், பொருளாளர் சாதிக்குல் அமீன், தூத்துக்குடி மேற்கு மாவட்ட காங்.,பொதுச் செயலாளர் ராஜவேல், வாழவல்லான் கணேசன், குறிச்சி கணேசன், பாமக.நெப்போலியன், சுற்றுவட்டார விவசாயிகள், பெண்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். மறியலில் ஈடுபட்ட அனைவரையும் போலீஸ்சார் கைது செய்தனர். அரசு உடன் நடவடிக்கை எடுத்து நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதை முற்றிலும் தடைசெய்யா விட்டால் மிகப் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்று மனித உரிமைகள் கழக சமூக ஆர்வலர் ஏரல் ஜெயபாலன் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...