வெள்ளி, 20 ஜனவரி, 2017

கொட்டும் பனி, கொளுத்தும் வெயிலை பொருட்படுத்தாமல் தூத்துக்குடியில் 3-வது நாளாக தொடரும் மாணவ-மாணவிகளின் போராட்டம்

ம்

கொட்டும் பனி, கொளுத்தும் வெயிலை பொருட்படுத்தாமல்
தூத்துக்குடியில் 3-வது நாளாக தொடரும் மாணவ-மாணவிகளின் போராட்டம்
கொட்டும் பனியையும், கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தூத்துக்குடியில் மாணவ, மாணவிகளின் போராட்டம் நேற்று 3-வது நாளாக தொடர்ந்து நடந்தது.
தூத்துக்குடி, 

கொட்டும் பனியையும், கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தூத்துக்குடியில் மாணவ, மாணவிகளின் போராட்டம் நேற்று 3-வது நாளாக தொடர்ந்து நடந்தது.

ஜல்லிக்கட்டு


தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு நடத்தக்கோரியும், பீட்டா அமைப்பை தடை செய்யக் கோரியும் மாணவர்கள் தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி எஸ்.ஏ.வி. பள்ளிக்கூட மைதானத்தில் இரவு, பகலாக மாணவ, மாணவிகள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இரவில் கொட்டும் பனியையும், பகலில் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து இந்த போராட்டத்தில் பங்கேற்று வருகின்றனர்.

3-வது நாளாக...

நேற்று 3-வது நாளாக ஏராளமான மாணவ, மாணவிகள் போராட்டம் நடைபெறும் மைதானத்திற்கு திரண்டு வந்தனர். தூத்துக்குடி மற்றும் சுற்று வட்டாரங்களில் உள்ள பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் காலை முதல் அணி, அணியாக போராட்டம் நடைபெற்ற மைதானத்துக்கு வந்த வண்ணமாக இருந்தனர். மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டம் நடைபெறும் மைதானத்தில் தன்னார்வலர்கள் பந்தல் அமைத்து கொடுத்தனர்.

அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் பஸ்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டன. மாணவ, மாணவிகள் ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தியும், தமிழர்களை வஞ்சிப்பதை மத்திய அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் கோஷங்களை எழுப்பியவாறு இருந்தனர்.

பெண் மயக்கம்

போராட்டத்தில் முத்தையாபுரத்தைச் சேர்ந்த மாலதி(வயது 30), பங்கேற்று இருந்தார். அவர் காலை முதல் கோஷங்களை எழுப்பியபடி இருந்தாராம். இதில் உடல்நிலை பாதிக்கப்பட்ட மாலதி திடீரென போராட்டம் நடந்த இடத்தில் மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

போராட்டத்தையொட்டி தூத்துக்குடியில் உள்ள பல்வேறு கல்லூரிகளுக்கு நேற்று விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. விடுதிகளில் தங்கி உள்ள மாணவர்கள் உடனடியாக உடைமைகளை எடுத்துக் கொண்டு ஊருக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர்.

பாதுகாப்பு

தூத்துக்குடி நகர உதவி போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரத்தினம் தலைமையில் மத்தியபாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரேனியஸ் ஜேசுபாதம் மற்றும் போலீசார் போராட்டம் நடைபெறும் மைதானத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர். மேலும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடந்து வருவதால் அனைத்து போலீசாரும் பணிக்கு அழைக்கப்பட்டு உள்ளனர். சி.பி.சி.ஐ.டி போலீஸ் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் பணியாற்றி வரும் போலீசாரும் சீருடையில் பணியமர்த்தப்பட்டு உள்ளனர்.

16 இடங்களில்


சாயர்புரத்தில் போப் கல்லூரி மாணவர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து கல்லூரி முன்பு நேற்றும் போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று மாலை வரை 16 இடங்களில் ஆர்ப்பாட்டம், தர்ணா போராட்டங்கள் நடந்தன. தூத்துக்குடி, திருச்செந்தூர், கோவில்பட்டி, விளாத்திகுளம், ஸ்ரீவைகுண்டம் உள்பட 8 இடங்களில் இரவு வரை போராட்டம் நீடித்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...