ஆறுமுகநேரி, பிப். 15: தமிழக அரசு பஸ் கட்டணத்தை உயர்த்தியதற்கு திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் கண்டனத்தை தெரிவித்தன. மேலும், போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இதன் காரணமாக கண்துடைப்புக்கு பஸ் டிக்கெட் கட்டணத்தை அரசு குறைத்தது. ஆனாலும், டிக்கெட் உயர்வைதிரும்ப பெறக்கோரி எதிர்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.இந்நிலையில், டிக்கெட் கட்டண உயர்வுக்கு பின்னர் டிக்கெட் வசூலிப்பதில் பல குளறுபடிகள் நடந்து வருகின்றன. அதாவது ஒவ்வொரு பணிமனைக்கு ஒவ்வொரு விதமாக டிக்கெட் வசூலிப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
அதாவது, திருப்பூர், கோவை பணிமனையில் இருந்து இயக்கப்படும் அரசு பஸ்களில் ஆறுமுகநேரியில் இருந்து தூத்துக்குடிக்கு ரூ.25 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இதே மதுரை பணிமனை பஸ்களில் ரூ.31 கட்டணமும், நெல்லை பணிமனையில் இருந்து இயக்கப்படும் பஸ்களில் ரூ.25ம், சில பஸ்களில் ரூ.26ம், ரூ.31ம் என வித விதமாக மக்களிடம் டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதே தனியார் பஸ்களில் ஆறுமுகநேரியில் இருந்து தூத்துக்குடிக்கு ரூ.20 மட்டுமே வசூலிக்கப்படுகிறது. அரசுப்பஸ்களை விட தனியார் பஸ்களில் கட்டணம் மிக குறைவாக இருப்பதால் தனியார் பஸ்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
அரசு பஸ்களில் பயணிக்கும் மக்கள், தொழிலாளர்கள், மாணவ, மாணவிகள் கட்டண உயர்வால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் சில நேரங்களில் கண்டக்டருடன் மக்கள் வாக்குவாத்தில் ஈடுபடும் சம்பவம் நடந்து வருகிறது.
இதுகுறித்து நீங்கள் பணிமனை அதிகாரியிடம் தெரிவிக்க வேண்டும் என கண்டக்டர்கள் கூறுகின்றனர். எனவே, உயர்த்திய கட்டணத்தையாவது, ஒரே விதமாக வசூலிக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக