தூத்துக்குடி,
தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி முதல் முறையாக 6 முனை போட்டியை சந்திக்கிறது.
பாராளுமன்ற தேர்தல்
தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி மறு சீரமைப்புக்கு பிறகு தூத்துக்குடி மாவட்டத்துக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளும் ஒருங்கிணைக்கப்பட்டு தூத்துக்குடி தொகுதி உருவானது. தூத்துக்குடி தொகுதி இந்த தேர்தலில் 6 முனை போட்டியை சந்திக்கிறது. அ.தி.மு.க., தி.மு.க., பா.ஜனதா கூட்டணி, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு, ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை களம் இறக்கி உள்ளது.
அ.தி.மு.க.
தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ள ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜியை ஆதரித்து முதல்–அமைச்சர் ஜெயலலிதா தேர்தல் பிரசாரம் செய்து உள்ளார். பல்வேறு நடிகர்களும் வாக்கு சேகரித்து உள்ளனர். வேட்பாளரும் வீதி வீதியாக வாக்கு சேகரிப்பில் இறங்கி உள்ளார். தமிழ்நாட்டில் ஆளும் கட்சியாக உள்ள அ.தி.மு.க. பெரும்பான்மை வாக்கு வங்கியை கொண்டு உள்ளது. அந்த வாக்குகளை சேகரிப்பதில் மும்முரம் காட்டி வருகின்றனர்.
தி.மு.க.
தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளராக மாவட்ட தி.மு.க. செயலாளர் என்.பெரியசாமியின் மகன் ஜெகன் அறிவிக்கப்பட்டு உள்ளார். இவரை ஆதரித்து தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஊர் ஊராக சென்று தேர்தல் பிரசாரம் செய்து வாக்கு சேகரித்தார். மேலும் வேட்பாளர் ஜெகன் தேர்தல் பிரசாரத்தை தீவிரப்படுத்தி உள்ளார். தி.மு.க.வில் உள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக், புதிய தமிழகம், மனிதநேய மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கூட்டணி கட்சியினரும் தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து வருகின்றனர்.
பா.ஜனதா கூட்டணி
தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் பா.ஜனதா கூட்டணி சார்பில் ம.தி.மு.க. வேட்பாளராக எஸ்.ஜோயல் அறிவிக்கப்பட்டு உள்ளார். வக்கீலான இவர் ம.தி.மு.க. மாவட்ட செயலாளராக பணியாற்றி வருகிறார். இந்த கூட்டணியில் பா.ஜனதா, ம.தி.மு.க., தே.மு.தி.க., பா.ம.க. உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் இடம் பெற்று இருக்கின்றன. தொடர்ந்து வேட்பாளர் ஜோயல் வாக்கு சேகரிப்பை தீவிரப்படுத்த இருப்பதாக தெரிகிறது.
காங்கிரஸ்
தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் ஏ.பி.சி.வி.சண்முகம் களம் இறங்கி உள்ளார். இவர் தூத்துக்குடி தொகுதியில் பிரபலமானவர் ஆவார். ஏற்கனவே சட்டமன்ற தொகுதியிலும் போட்டியிட்டு மயிரிழையில் வெற்றியை நழுவவிட்டவர் ஆவார். தனித்து விடப்பட்ட காங்கிரஸ் கட்சியினர் தங்கள் பலத்தை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டு உள்ளனர். இதனால் காங்கிரஸ் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட இருப்பதாக கூறப்படுகிறது.
இந்திய கம்யூனிஸ்டு கட்சி
தூத்துக்குடி தொகுதி இந்திய கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளராக ஏ.மோகன்ராஜ் அறிவிக்கப்பட்டு உள்ளார். இவர் கட்சியின் மாவட்ட செயலாளராகவும், ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட தலைவராகவும் உள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி, எட்டயபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கணிசமான அளவுக்கு கம்யூனிஸ்டு கட்சி ஆதரவாளர்கள் உள்ளனர். இதனால் அந்த வாக்குகளை முழுமையாக பெறுவதற்கான முயற்சிகளில் இறங்கி உள்ளார்.
ஆம் ஆத்மி
தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் ஆம்ஆத்மி கட்சி சார்பில் புஷ்பராயன் அறிவிக்கப்பட்டு உள்ளார். இவர் கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர் ஆவார். இவருக்கு ஆதரவாக சமீபத்தில் தூத்துக்குடியில் மறைமாவட்ட பாதிரியார்களின் கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்டவர்கள் புஷ்பராயனை ஏகமதாக ஆதரிப்பதாக தெரிவித்து உள்ளனர். அதே நேரத்தில் கட்சியின் தேர்தல் அலுவலகம் திறப்பு விழாவும் கோலாகலமாக நடைபெற உள்ளது. இவர் தூத்துக்குடி கடலோர பகுதி மக்களின் ஓட்டுக்களை கணிசமாக பெறுவார் என்று கூறப்படுகிறது.
6 முனைப்போட்டி
இதனால் தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் முதல் முறையாக 6 முனைப் போட்டி ஏற்பட்டு உள்ளது. 6 வேட்பாளர்களும் தூத்துக்குடி மக்களுக்கு பரிட்சயமானவர்களாகவும், பலம் வாய்ந்தவர்களாகவும் காணப்படுகின்றனர்.
இதனால் இந்த தொகுதியில் வாக்குகள் சிதறக்கூடும் என்று கூறப்படுகிறது. இந்த பலத்த போட்டியின் இடையே வெற்றி பெறப்போவது யார் என்பது தேர்தல் முடிவு வெளியானது தெரியவரும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக