சாதிச் சான்றிதழ் கேட்டு ஆட்சியரிடம் மனு
காட்டுநாயக்கன் சமூகத்தினருக்கு பழங்குடியின சாதிச் சான்றிதழ் வழங்கக் கோரி பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனர்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தின்போது, ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள சூளைவாய்க்கால் பகுதியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் முழக்கங்களை எழுப்பியபடி ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்தனர்.
பின்னர் அவர்கள் ஆட்சியரிடம் அளித்த மனுவில், காட்டுநாயக்கன் சமூகத்தைச் சேர்ந்த தங்களது குழந்தைகள் ஏராளமானோர் பள்ளி, கல்லூரிகளில் படித்து வருவதாகவும், அவர்களுக்கு பழங்குடியினர் சாதிச் சான்றிதழ் வழங்கப் படுவதில்லை என்றும் தெரிவித்திருந்தனர். மதுரை, ராமநாதபுரம் பகுதியில் வசிக்கும் தங்களது சாதியைச் சேர்ந்தவர்களுக்கு வழங்கப்படுவதுபோல தங்களது குழந்தைகளுக்கும் பழங்குடியினர் என்ற சான்றிதழை வழங்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. எட்டயபுரம் அருகேயுள்ள சக்கிலியப்பட்டி பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் ஆட்சியரிடம் அளித்த மனுவில், 1970-ம் ஆண்டு முதல் தங்களது பகுதியில் இருந்த ரேஷன் கடை கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு கீழநாட்டுக்குறிச்சி பகுதியில் உள்ள புதிய கட்டடத்துக்கு மாற்றப்பட்டது. ஆனால், 1003 குடும்ப அட்டைகள் உள்ள இப் பகுதிக்கு தாற்காலிகமாக உள்ள கடை மூலம் பொருள்கள் வழங்கப் பட்டு வருகிறது. இருப்பினும், வாடகைத் தொகை செலுத்தினால்தான் பொருள்கள் வழங்குவதாக கூறுகிறார்கள்.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்து ரேஷன் பொருள்கள் முழுமையாகக் கிடைக்க வழி செய்ய வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக