ஏரல் பகுதிகளில் வடிகால் வசதி இல்லாததால் கொடிக்காலில் வெற்றிலைகள் அழுகி சேதம் அடைகின்றன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான திருவழுதிநாடார்விளை, வாழவல்லான், லெட்சுமிபுரம், உமரிக்காடு, முக்காணி, ஆத்தூர், மேல ஆத்தூர், சேதுக்குவாய்த்தான், சொக்கப்பழங்கரை, மரந்தலை, வெள்ளக்கோயில், சுகந்தலை உட்பட பகுதிகளில் முக்கிய விவசாய தொழிலாக வெற்றிலை பயிரிடப்பட்டு வருகிறது. ஐப்பசி மாதம் வெற்றிலை கொடிக்கால் தொழிலை விவசாயிகள் தொடங்குகின்றனர். நன்கு வளர்ந்த ஒரு கொடியில் மாதத்திற்கு ஒரு முறை பறிக்கின்றனர். ஒரு வெற்றிலை கொடிக்கால் இரண்டரை ஆண்டுகள் வரை பலன்தரும்.
வெளிமார்க்கெட்டுக்கு அனுப்பப்படும் வெற்றிலை விலையை இப்பகுதியில் தலைமையிடமாக செயல்படும் தெற்கு ஆத்தூர் வெற்றிலை கொடிக்கால் சங்கம்தான் நிர்ணயம் செய்யும். வெற்றிலை விலை கடந்த 5 மாதங்களுக்கு முன் நல்ல விலைக்கு விற்பனையானது. ஆனால் தற்போது வெற்றிலை விலை 2 மாதங்களாக குறைந்துள்ளது.
மேலும் ஏரல்&மங்கலகுறிச்சி ரோடு விரிவாக்கம் செய்ததில் திருவழுதிநாடார்விளை பஸ் ஸ்டாப்பில் இருந்து ஏரல் சினிமா தியேட்டர் வரை உள்ள பாசன கால்வாயை சிதைத்து விட்டனர். மேலும் பல வயல்களில் குறுமண் போட்டு வயலை ரோடு மட்டத்திற்கு கொண்டு வந்துவிட்டதால் தண்ணீர் சரியாக விவசாய நிலங்களில் வடியாமல் தேங்குகிறது. இதனால் ஏரல் ஆற்றுப்பாலம் அருகில் உள்ள கொடிக்காலில் உள்ள வெற்றிலை பயிர்கள் அழுகி சேதம் அடைந்துள்ளதால் அப்பகுதி விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர்.
அரசு காப்பாற்ற வேண்டும்
இதுகுறித்து ஏரல் வெற்றிலை விவசாயி பெருமாள் கூறுகையில், “ஏரல் மற்றும் ஆத்தூர் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் ஆயிரம் ஏக்கரில் வெற்றிலை விவசாயம் நடந்து வந்தது. ஆனால் தற்போது 500 ஏக்கராக குறைந்துள்ளது. ஏரல் பகுதியில் வடிகால் வசதி இல்லாததால் மழைக்காலத்தில் தண்ணீரை வடியவைக்க முடியாமலும், கோடைக்காலத்தில் தண்ணீர் கிடைக்காமலும் விவசாயிகள் சிரமப்படுகின்றனர்.
வெற்றிலையில் வேர் அழுகல் நோய் ஏற்பட்டு அதிக அளவு பாதிக்கப்படுகிறது. தற்போது வெற்றிலை விலையும் குறைந்துள்ள நிலையில் விவசாயிகள் நலன் கருதி அழிந்து வரும் இத்தொழிலை காப்பாற்ற விவசாயிகளுக்கு கடன் வசதி செய்து தர வேண்டும். மேலும் கோடைக்காலத்தில் போர் அமைத்து இலவச மின்மோட்டார் பொருத்த ஏற்பாடு செய்ய வேண்டும். மழைக்காலத்தில் தண்ணீரை வடிய வைக்க வடிகால் வசதியும் அரசு செய்து கொடுக்க வேண்டும்” என்றார்.
ஏரல் பகுதி விவசாயிகள் பாதிப்பு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக