தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு ஊழியர்கள் நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தூத்துக்குடி
தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு ஊழியர்கள் நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
வேலை நிறுத்தம்
அரசு ஊழியர்களுக்கு புதிய ஊதிய மாற்றம் செய்யப்படும் வரை 20 சதவீதம் இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை திரும்ப பெற்று பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். காலமுறை ஊதியத்தில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் நேற்று முன்தினம் முதல் வேலை நிறுத்த போராட்டம் நடத்தி வருகின்றனர்.
நேற்று 2–வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகா அலுவலகங்கள், உதவி கலெக்டர் அலுவலகங்கள் மற்றும் கலெக்டர் அலுவலகத்தில் வருவாய்த்துறை பணிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டன. பஞ்சாயத்து யூனியன் அலுவலகங்களிலும் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் அனைத்து பணிகளும் முடங்கி உள்ளன.
ஆர்ப்பாட்டம்
நேற்று காலை அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு தூத்துக்குடி வட்ட செயலாளர் முருகன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் வெங்கடேசன், மாவட்ட சி.ஐ.டி.யு. துணை தலைவர் ராமமூர்த்தி, சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட துணை தலைவர் வைஜெயந்தி மாலா, வணிகவரித்துறை பணியாளர் சங்க மாநில செயலாளர் முருகன், நில அளவையர் ஒன்றிப்பு மாவட்ட தலைவர் அண்ணாமலை பரமசிவன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
ஆர்ப்பாட்டத்தின் போது, ஊழியர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்தும் கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் திரளான ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
கோவில்பட்டி–விளாத்திகுளம்
இதேபோல் கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகம், தாலுகா அலுவலகம், யூனியன் அலுவலகத்தில் பெரும்பாலான அரசு ஊழியர்கள் பணிக்கு செல்லவில்லை.
கோவில்பட்டி தாலுகா அலுவலகம் முன்பு அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்க வட்டார தலைவர் பார்த்தசாரதி தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் ஜெகநாதன், இணை செயலாளர் சின்னதம்பி, முத்துசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விளாத்திகுளம் தாலுகா அலுவலகம், யூனியன் அலுவலகத்தில் அரசு ஊழியர்கள் பணிக்கு செல்லாததால் வெறிச்சோடின. விளாத்திகுளம் யூனியன் அலுவலகம் முன்பு அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்க வட்டார செயலாளர் செந்தில்குமரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
எட்டயபுரம் தாலுகா அலுவலகத்தில் பணியாற்றும் 25 ஊழியர்களில் 7 பேர் மட்டுமே பணிக்கு வந்தனர். இதனால் தாலுகா அலுவலகத்துக்கு பல்வேறு பணிகளுக்காக வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
திருச்செந்தூர்
திருச்செந்தூர் தாலுகா அலுவலகத்தில் பணியாற்றும் 36 ஊழியர்களில் 9 பேர் மட்டுமே பணிக்கு வந்தனர். திருச்செந்தூர் உதவி கலெக்டர் அலுவலகத்தில் பணியாற்றும் 10 ஊழியர்களும் பணிக்கு வரவில்லை. திருச்செந்தூர் யூனியன் அலுவலகத்தில் பணியாற்றும் 33 ஊழியர்களில் 17 பேர் மட்டுமே பணிக்கு வந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக