வியாழன், 27 ஏப்ரல், 2017

ஏரல் பகுதியில் தொடர் திருட்டு: சித்தியுடன் வாலிபர் கைது

ஏரல் பகுதியில் தொடர் திருட்டு: சித்தியுடன் வாலிபர் கைது

ஏரல் பகுதியில் தொடர் திருட்டு: சித்தியுடன் வாலிபர் கைது
ஏரல் பகுதிகளில் பல்வேறு இடங்களில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்த வாலிபர்– சித்தியுடன் கைது செய்யப்பட்டார்.
ஏரல்,
ஏரல் பகுதிகளில் பல்வேறு இடங்களில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்த வாலிபர்– சித்தியுடன் கைது செய்யப்பட்டார். மேலும், இவர்களுடன் தொடர்புடைய முக்கிய குற்றவாளியை போலீசார் தேடிவருகின்றனர்.
வாலிபர் சிக்கினார்
ஏரல் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) கோகிலா, சப்– இன்ஸ்பெக்டர்கள் சரவணன், சண்முகசுந்தரம், பயிற்சி சப்– இன்ஸ்பெக்டர்கள் செல்வம், சகாய அனிஷ்கா மற்றும் போலீசார் ஏரல் தாமிரபரணி ஆற்றங்கரை வழியாக ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு நின்ற வாலிபர் ஒருவர், போலீசாரைக் கண்டதும் மோட்டார் சைக்கிளில் தப்பிச் செல்ல முயன்றார். அவரை விரட்டி பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில், அவர் தூத்துக்குடி அருகே புதுக்கோட்டையை அடுத்த கூட்டாம்புளியைச் சேர்ந்த சுயம்புலிங்கம் மகன் வீரமணி (வயது 19) என்பதும், இவர் ஏரல் பகுதிகளில் பல்வேறு இடங்களில் வழிப்பறி, திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. எனவே அவரை போலீசார் கைது செய்து, மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.
கைதான வீரமணி போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:–
சிறுவயதில் கொலை
நான், கடந்த 2013–ம் ஆண்டு எங்களது வீட்டின் அருகில் வசித்த கண்ணன் என்பவரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்தேன். பின்னர் சென்னையில் சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கூடத்தில் அடைக்கப்பட்டேன். அங்கிருந்து விடுவிக்கப்பட்டு சொந்த ஊருக்கு வந்த நான் மிளகுராஜ் மகன் முத்துசாமியுடன் சேர்ந்து கட்டிட வேலைக்கும், வாழைத்தார் ஏற்றி இறக்கும் வேலைக்கும் சென்று வந்தேன். பின்னர் அவருடன் சேர்ந்து பல்வேறு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்தேன்.
கதவை உடைத்து திருட்டு
கடந்த ஜனவரி 27–ம் தேதிஅன்று இரவில் நானும், முத்துசாமியும் ஏரல்– உமரிக்காடு ரோட்டில் பூட்டி கிடந்த வீட்டின் பின்பக்க கதவை உடைத்து, அங்கிருந்த வெள்ளி, பித்தளை பொருட்களை திருடினோம். பின்னர் கடந்த பிப்ரவரி மாதம் ஏரல் அருகே செல்வநாயகபுரத்தில் ஒரு வீட்டில் இரவில் கதவை திறந்து வைத்து தூங்கி கொண்டிருந்தவர்களிடம் மொத்தம் 12¾ பவுன் தங்க சங்கிலிகளை பறித்து சென்றோம்.
நகைகடைக்காரரிடம் வழிப்பறி
மறுநாள் இரவில் ஆத்தூரில் நகைக்கடை வைத்திருக்கும் ஒருவர் மோட்டார் சைக்கிளில் சென்றபோது, வாழவல்லான் தண்ணீர் தொட்டி அருகில் அவரை வழிமறித்து முகத்தில் மிளகாய் பொடி வீசி தாக்கி, அவரிடம் இருந்த ரூ.1,200–யை பறித்து சென்றோம். பின்னர் பெருங்குளத்தில் ஒரு வீட்டில் புகுந்து பீரோவை உடைத்து, அதில் இருந்த 5 பவுன் தங்க சங்கிலி, தங்க கம்மல் ஆகியவற்றை திருடிச் சென்றோம்.
மொபட்டுகள்–மோட்டார் சைக்கிள் திருட்டு
கடந்த 9–ந்தேதி ஏரல் நட்டார் அம்மன் கோவில் கொடை விழாவுக்கு சென்றபோது, அங்கு நின்ற மொபட்டை திருடிச் சென்றோம். கடந்த 14–ந்தேதி ஏரல் பிள்ளையார் கோவில் அருகில் நின்ற மொபட்டை திருடிச் சென்றோம். கடந்த 22–ந்தேதி ஏரல் அருகே திருவழுதிநாடார்விளையில் கிறிஸ்தவ ஆலயம் அருகில் நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிளை திருடிச் சென்றோம்.
சித்தியிடம்....
கடந்த 24–ந்தேதி ஏரல் மங்கலகுறிச்சி தடுப்பணையில் குளிக்க சென்ற ஒருவர் தனது தங்க சங்கிலியை கழட்டி மணிபர்சில் வைத்து, ஆடைகளுடன் கரையில் வைத்து இருந்தார். அவற்றை திருடிச் சென்றேன். நாங்கள் திருடிய பொருட்களை எனது சித்தியான ஆத்தூர் அருகே தலைவன்வடலியில் வசித்து வரும் மாரிமுத்து மனைவி பால்தங்கத்திடம் கொடுத்து வைத்து செலவு செய்து வந்தேன். இவ்வாறு அவர் போலீசாரிடம் வாக்குமூலத்தில் தெரிவித்தார்.
இதையடுத்து பால்தங்கத்தையும் போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்த 2 பவுன் தங்க சங்கிலி பறிமுதல் செய்யப்பட்டது. தலைமறைவான முத்துசாமியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். கைதான வீரமணி, பால்தங்கம் ஆகிய 2 பேரையும் போலீசார் ஸ்ரீவைகுண்டம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...