ஏரல் சேர்மன் அருணாசலசாமி கோவிலில் அன்னமலை தரிசனம்

ஏரல் சேர்மன் அருணாசலசாமி கோவிலில் குருபூஜையை முன்னிட்டு அன்னமலை தரிசனம் நடந்தது. பக்தர்களுக்கு பெட்டிச்சோறு வழங்கப்பட்டது.
ஏரல்,
ஏரல் சேர்மன் அருணாசலசாமி கோவிலில் 109–ம் ஆண்டு குருபூஜையை முன்னிட்டு அன்னமலை தரிசனம் நடந்தது. பக்தர்களுக்கு பெட்டிச்சோறு வழங்கப்பட்டது.
சேர்மன் அருணாசலசாமி
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் ஏரல் சேர்மன் அருணாசலசாமி கோவிலும் ஒன்றாகும். கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாத அமாவாசை தினத்துக்கு மறுநாள் குருபூஜை நடைபெறும். இதனை முன்னிட்டு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் குடும்பத்தினருடன் சித்திரை மாத அமாவாசை தினத்தில் கோவிலுக்கு வருவார்கள்.
பக்தர்கள் அரிசி, பருப்பு, காய்கறிகள், பழங்களை கோவிலுக்கு காணிக்கையாக வழங்குவார்கள். பக்தர்கள் வழங்கிய பொருட்களை கொண்டு, மறுநாள் குருபூஜை தினத்தில் சமைத்து அன்னமலை தீபாராதனை நடத்தி, அன்னதானம் வழங்கப்படுவது வழக்கம்.
அன்னமலை தரிசனம்
இந்த ஆண்டு அமாவாசை தினமான நேற்று முன்தினம் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து காணிக்கை பொருட்களை வழங்கினர். அவற்றை சேர்மன் அருணாசலசாமியின் 109–வது குருபூஜை தினமான நேற்று அதிகாலையில் சமைத்தனர். காலை 10.30 மணிக்கு அன்னமலை சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது. தொடர்ந்து அன்னமலை சிறப்பு தரிசனம் நடந்தது.
பின்னர் கோவில் பரம்பரை அக்தார் அ.ரா.க.அ.கருத்தப்பாண்டிய நாடார் அன்னதானத்தை தொடங்கி வைத்தார். பல ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏராளமான பக்தர்களுக்கு பெட்டிச்சோறும் வழங்கப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக