
தங்களது அணியில் சேர தினகரன், எடப்பாடி பழனிசாமி அணியினர் என்னிடம் ரூ.5 கோடி வரை பேரம் பேசுகிறார்கள் என்று எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ. கூறினார். தூத்துக்குடி அண்ணா தொழிற்சங்கம்(புரட்சி தலைவி அம்மா) சார்பில் கொடியேற்று விழா நேற்று காலை நடந்தது. விழாவில் தூ
தூத்துக்குடி,
தங்களது அணியில் சேர தினகரன், எடப்பாடி பழனிசாமி அணியினர் என்னிடம் ரூ.5 கோடி வரை பேரம் பேசுகிறார்கள் என்று எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ. கூறினார்.
தூத்துக்குடி அண்ணா தொழிற்சங்கம்(புரட்சி தலைவி அம்மா) சார்பில் கொடியேற்று விழா நேற்று காலை நடந்தது. விழாவில் தூத்துக்குடி மாவட்ட அ.தி.மு.க. (புரட்சி தலைவி அம்மா) பொறுப்பாளர் எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ. பேசியதாவது:–
ரூ.5 கோடி பேரம்
முன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதா, சசிகலா குடும்பத்தினரை கட்சியைவிட்டு ஒதுக்கி வைத்து இருந்தார். சோதனை காலங்களில் ஜெயலலிதா, ஓ.பன்னீர்செல்வத்தை தான் அடையாளம் காட்டினார்.
கூவத்தூர் விடுதியில் 122 எம்.எல்.ஏ.க்களை அடைத்து வைத்து இருந்தனர். அவர்களுக்கு தலா ரூ.5 கோடி வரை கொடுத்து உள்ளனர். இதற்கு விசாரணை கமிஷன் அமைத்தால் உண்மை தெரியவரும். என்னிடமும் இதுவரை ரூ.5 கோடி தருவதாக பேரம் பேசுகிறார்கள்.
நாடகம்
எடப்பாடி பழனிசாமி அணி சார்பில் தேர்தல் ஆணையத்தில் ஒரு பிரமாணம் தாக்கல் செய்து உள்ளனர். அதில் பொதுச் செயலாளர் சசிகலா, துணை பொதுச் செயலாளர் தினகரன் என்றே குறிப்பிட்டு உள்ளனர். இவர்கள் சசிகலா குடும்பத்தை ஒதுக்கி வைத்து இருப்பதாக நாடகமாடுகிறார்கள். எடப்பாடி பழனிசாமி அணியில் இருப்பவர்கள் பணத்துக்காக உள்ளனர். அம்மாவின் விசுவாசிகளாக இல்லை.
தேர்தல் ஆணையம், ஜெயில் என்று அனைத்தையும் விலைபேசுகின்றனர். அனைத்தையும் காசு கொடுத்து பெற்று விடலாம் என்று முயற்சி செய்கிறார்கள். இது பலிக்காது.
இவ்வாறு அவர் பேசினார்.
கமல்ஹாசனை மிரட்டக்கூடாது
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும்போது, ‘தினகரன் அணி, எடப்பாடி பழனிசாமி அணி ஆகிய 2 அணியினரும் என்னிடம் பேரம் பேசி வருகின்றனர். இரு அணிகளும் இணைவது குறித்து தலைவர்கள் தான் முடிவு செய்வார்கள். அமைச்சர் விஜயபாஸ்கர் மீது ஊழல் குற்றச்சாட்டு குறித்து முதல்–அமைச்சர் தான் முடிவு எடுக்க வேண்டும். எடப்பாடி பழனிசாமி அரசு செயல்படாத அரசு, ஊழல் நிறைந்த அரசு என்று சாதாரண மனிதனாக நடிகர் கமல்ஹாசன் கூறி உள்ளார். அதற்காக அவரை மிரட்டும் வகையில் அமைச்சர்கள் பேசக்கூடாது’ என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக