தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் கோமான் மேல தெருவை சேர்ந்தவர் ரிபாய். சமையல் தொழிலாளி. இவரது மகன்கள் வருசா அகமது (வயது 17), ஷாலிக்(15). யூசுப் தஹா என்ற மகளும் உள்ளார். இவர்களில் வருசா அகமது செய்துங்கநல்லூரில் உள்ள ஒரு பாலிடெக்னிக் கல்லூரியிலும், ஷாலிக் காயல்பட்டினத்தில் உள்ள ஒரு பள்ளியில் பத்தாம் வகுப்பும் படித்து வந்தனர்.
நேற்று ரம்ஜான் பண்டிகையையொட்டி ரிபாய் தன்னுடைய குடும்பத்தினர், உறவினர்களுடன் தங்கை பஷிர் நிஷா காரில் மணப்பாட்டுக்கு சுற்றுலா சென்றார். அவர்கள் மணப்பாடு கடற்கரையை சுற்றி பார்த்தனர். பின்னர் மதியம் 2 மணி அளவில் வருசா அகமது, ஷாலிக் உள்ளிட்ட சிலர் கடலில் இறங்கி குளித்தனர்.
அப்போது ஷாலிக் கடலில் திடீரென்று வந்த பெரிய அலையில் சிக்கி மூழ்கினான். இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த வருசா அகமது, தனது தம்பியை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டார். அப்போது ராட்சத அலையில் இருவரும் சிக்கி மூழ்கினர். உடனே அவர்களுடைய பெற்றோர், உறவினர்கள் கூச்சலிட்டனர்.
இதையடுத்து சத்தம் கேட்டு கடற்கரையில் இருந்த மீனவர்கள் ஓடிச் சென்று கடலில் இறங்கி இருவரையும் தேடினர். முதலில் வருசா அகமதுவையும், சிறிது நேரத்தில் ஷாலிக்கையும் மீட்டு சிகிச்சைக்காக திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர்கள், அவர்கள் இருவரும் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். ரம்ஜான் பண்டிகையை கொண்டாட வந்த இடத்தில் தங்களது இரு மகன்களையும் ஒரு சேர பறிகொடுத்து விட்டு ரிபாயும், அவரது மனைவியும் கதறி அழுத காட்சி காண்போரின் கண்களை குளமாக்கியது.
இதுகுறித்து குலசேகரன் பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுதாகர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக